கர்நாடகாவிற்கு தமிழக காங்கிரஸ் சப்போர்ட்.. எச்சரிக்கும் தமிழக விவசாய சங்க தலைவர் பி.ஆர்.பாண்டியன்
சென்னை: மேகதாதுவில் அணை கட்ட வலியுறுத்தி கர்நாடக காங்கிரஸ் கட்சி பாதயாத்திரை மேற்கொள்கிறது. இதற்கு பதிலடி தரும்வகையில் காவிரி விவசாயிகள் சங்கம் மேகதாட்டுவை முற்றுகையிடுவதாகத் தெரிவித்துள்ளது.
காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டுவில் அணை கட்ட கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு மத்திய அரசு அனுமதி தராததால் கட்டுமான பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை.
மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடகா அரசின் திட்டத்துக்கு அனுமதி அளிக்க கூடாது எனக் கோரியும், ராசிமணல் திட்டத்தை அமல்படுத்த கோரியும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் ரிட் மனு தாக்கல் செய்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
மேகதாது திட்டத்தைக் கைவிட்டு, தமிழ்நாட்டின் ராசிமணல் அணை திட்டத்தை செயல்படுத்த கோரிய வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் மனு மீது மத்திய அரசு, கர்நாடக அரசு மற்றும் தமிழக அரசு 3 மாதங்களில் முடிவெடுக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

கர்நாடக காங்கிரஸ்
இந்நிலையில் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும்போது, மேகேதாட்டு திட்டத்தை செயல்படுத்தக் கோரி காங்கிரஸ் சார்பில் நேற்று முன்தினம் பாதயாத்திரை தொடங்கப்பட்டது. கர்நாடக காங்கிரஸ் தலைவர் சிவகுமார் தலைமையில் இந்த பாதயாத்திரை நடந்தது. முன்னாள் அமைச்சர்கள் உட்பட பல காங்கிரஸ் தலைவர்களும், ஆயிரக்கணக்கான தொண்டர்களும் பாதயாத்திரையில் பங்கேற்றனர்.

வழக்குப்பதிவு
கொரோனா கட்டுப்பாடுகளை கடைபிடிக்காமல் பாதயாத்திரை மேற்கொண்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நோட்டீஸ்அனுப்பியது கர்நாடக மாநில அரசு. மக்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் பாதயாத்திரை மேற்கொள்ளும் சிவகுமாருக்கு தேர்தலில் பாடம் கற்பிப்பார்கள் என கர்நாடக முதல்வர் தெரிவித்திருக்கிறார்.

காவிரி விவசாயிகள் சங்கம்
தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் நிர்வாகிகள் கூட்டம் திருவாரூரில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற அதன் பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் ''கர்நாடகாவில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன், மேகேதாட்டுவில் அணை கட்ட வலியுறுத்தி கர்நாடக காங்கிரஸ் கட்சியினர், மேகேதாட்டுவில் தொடங்கி பெங்களூரு நோக்கி கடந்த 2 நாட்களாக பாதயாத்திரையை நடத்தி வருகின்றனர்.

கொரோனா காலத்தில்
கொரோனா காலத்தில் பல்லாயிரக்கணக்கானோரை ஒன்று திரட்டி, கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் சிவக்குமார், இந்த யாத்திரையை நடத்தி வருகிறார். இதை மத்திய, மாநில அரசுகள் தடுத்து நிறுத்த தயங்குகின்றன. கர்நாடக காங்கிரஸ் கட்சியின் இப்போராட்டத்திற்கு, தமிழக விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றோம்.

தமிழக முதல்வர்
தமிழக அரசு இதை தட்டிக்கேட்க முன்வர வேண்டும். கர்நாடக காங்கிரஸ் கட்சியின் போராட்டத்துக்கு தமிழக முதல்வர் கண்டனத்தையும் தெரிவிக்க வேண்டும். கர்நாடகா காங்கிரஸ் கட்சியின் பாதயாத்திரையை தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி ஆதரிக்கிறார். இந்த நிலை தொடர்ந்தால், தமிழக காங்கிரஸ் கட்சிக்கு எதிரான போராட்டங்களை தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் முன்னெடுக்கும்.

முற்றுகை
கர்நாடக காங்கிரஸ் கட்சியின் இந்த போராட்டத்துக்கு எதிராக தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் சார்பில், ஜன.18-ம் தேதி திருவாரூரிலிருந்து புறப்பட்டு சேலம், தர்மபுரி வழியாக 19-ம் தேதி மேகேதாட்டு பகுதியை முற்றுகையிட உள்ளோம். எங்கள் போராட்டத்துக்கு அரசு, உரிய அனுமதியையும் பாதுகாப்பையும் வழங்க வேண்டும்'' என்று பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.
முன்னதாக கடந்த டிசம்பர் மாதத்தில், காவிரி விவசாயிகள் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கர்நாடகா காங்கிரஸ் கட்சிக்கும், தமிழக காங்கிரஸ் கட்சி தலைமைக்கு எதிராகவும், மேகதாதுவில் அனைக்கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.












Click it and Unblock the Notifications