உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை கர்நாடகா மதிக்காத போக்கு சரி இல்லை- அமைச்சர் துரைமுருகன் எச்சரிக்கை!
சென்னை: காவிரி நதிநீர் திறப்பு விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை கர்நாடகா மதிக்காத போக்கு சரி இல்லை என தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
காவிரியில் தமிழ்நாட்டுக்கு உரிய நீரை திறந்துவிட வேண்டும் என காவிரி ஒழுங்காற்று பரிந்துரை வழங்கும்; இதனடிப்படையில் காவிரி மேலாண்மை ஆணையமும் உத்தரவிடும். ஆனால் இந்த உத்தரவை கர்நாடாக அரசு மதிக்காமல் சொற்ப அளவு நீரைத்தான் திறந்துவிட்டு வருகிறது.

காவிரி மேலாண்மை ஆணையம்: தற்போதும் காவிரியில் வினாடிக்கு 2,600 கன அடி நீர் திறந்துவிட வேண்டும் என காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து நவம்பர் 3-ந் தேதி காவிரி மேலாண்மை ஆணையம் கூட உள்ளது. இந்தக் கூட்டத்தில் தமிழ்நாட்டுக்கு வினாடிக்கு 2,600 கன அடி நீரை திறந்துவிட காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட இருக்கிறது.
டிகேஎஸ் அடம்: ஆனால் இப்போதே, காவிரியில் ஒரு சொட்டு நீரைக் கூட திறக்கமாட்டோம் என கர்நாடகா துணை முதல்வர் டிகே சிவகுமார் கூறிவருகிறார். கர்நாடகா அணைகளின் நீர் இருப்பு என்பது குடிநீருக்கானதுதான்; தமிழ்நாட்டு பாசனத்துக்கு நீரை திறக்கவே முடியாது என்கிறார்.
துரைமுருகன் கண்டனம்: கர்நாடகாவின் இந்த ஆணவப் போக்குக்கு தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் துரைமுருகன், கர்நாடகா தமிழ்நாட்டுக்கு வெறும் 53 டிஎம்சி நீரைத்தான் தந்துள்ளது. இன்னமும் 86 டிஎம்சி நீர் தர வேண்டும். கர்நாடகாவின் இந்த போக்கு ஜனநாயகத்துக்கு ஆரோக்கியமானது அல்ல இது வன்மையாக கண்டிக்கத்தக்கது என கூறியுள்ளார்.
மண்டியா போராட்டம்: ஏற்கனவே தமிழ்நாட்டுக்கு காவிரி நீரை திறக்கக் கூடாது என வலியுறுத்தி கர்நாடகாவின் மண்டியா மாவட்டத்தில் 2 மாதங்களாக தொடர் போராட்டம் நடத்தி வருகிறது. இருந்த போதும் சொற்ப நீரையாவது கர்நாடகா திறந்துவிட்டது. தற்போது துணை முதல்வர் டிகே சிவகுமாரின் பிடிவாதம் காரணமாக, தமிழ்நாட்டின் காவிரி டெல்டா பாலைவனமாகும் அச்சத்தை வெளிப்படுத்துகின்றனர் தமிழ்நாட்டு விவசாயிகள். தமிழ்நாடு அரசும் உச்சநீதிமன்றத்தின் கதவுகளைத் தட்டியும் கர்நாடகா தொடர்ந்து பிடிவாதம் காட்டுவதாலேயே அமைச்சர் துரைமுருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications