தமிழ்நாட்டில் வெடிக்கும் காவிரி போராட்டம்- செப்.30-ல் ஆளுநர் மாளிகை முற்றுகையை அறிவித்த வேல்முருகன்!
சென்னை: தமிழ்நாட்டுக்கான காவிரி நீரை தர மறுக்கிற கர்நாடகா அரசைக் கண்டித்தும் கர்நாடகாவுக்கு துணை நிற்கிற மத்திய பாஜக அரசைக் கண்டித்தும் சென்னையில் உள்ள தமிழ்நாடு ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டம் வரும் 30-ந் தேதி நடைபெறும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் எம்.எல்.ஏ அறிவித்துள்ளார்.
காவிரியில் தமிழ்நாட்டுக்கு 5,000 கன அடி நீரைத் திறந்துவிட வேண்டும் என்ற உத்தரவை கர்நாடகா அரசு செயல்படுத்தாமல் சொற்ப நீரைத் திறந்துவிட்டது. இதற்கும் எதிராக கன்னட அமைப்புகள், விவசாயிகள் மண்டியா பந்த், பெங்களூர் பந்த் போராட்டம் நடத்தினர். மேலும் நாளை மறுநாள் கர்நாடகா பந்த் போராட்டத்தையும் அறிவித்துள்ளனர். தற்போது வினாடிக்கு 3,000 கன அடி நீரை 18 நாட்களுக்கு திறந்துவிடவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கும் கன்னட அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இப்போராட்டங்களில் தமிழ்நாட்டு முதல்வர் மு.க.ஸ்டாலினை இழிவுபடுத்துகிற செயல்களையும் கன்னட அமைப்பினர் செய்து வருகின்றனர். இது தமிழ்நாட்டில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகாவின் இத்தகைய போக்கைக் கண்டித்து வரும் 30-ந் தேதி சென்னையில் ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் நடைபெறும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் எம்.எல்.ஏ. அறிவித்துள்ளார்.
கன்னடர் போராட்டம்: இது தொடர்பாக பண்ருட்டி வேல்முருகன் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியுள்ளதாவது: கர்நாடகா அரசு, தமிழ்நாட்டுக்கு உரிய நீரை திறந்துவிட வேண்டும் என்று காவிரி நதிநீர் மேலாண்மை வாரியமும் உச்சநீதிமன்றம் உத்தரவுகளைப் பிறப்பித்தன. ஆனால் இதன் பின்னரும் காவிரி நீரை கர்நாடகா அரசும் கன்னட அமைப்புகளும் மிகப் பெரிய வன்முறை போராட்டங்களை கர்நாடகத்தில் நடத்தி வருகின்றனர்.
தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் எதிர்வரும் 30-9-2023, சனிக்கிழமையன்று மாலை 2 மணியளவில் தமிழ்நாட்டின் வாழ்வாதாரமான காவிரியில் உச்சநீதிமன்ற ஆணையிட்டும், காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டும் தமிழகத்திற்கு உரிமையான நீரை திறந்து விட மறுப்பதோடு கன்னட இனவெறிக் கும்பல்களை… pic.twitter.com/1tbXJP0GY3
— Velmurugan.T (@VelmuruganTVK) September 27, 2023
இழி செயல்களில் கன்னட அமைப்பினர்: தமிழ்நாட்டு முதல்வரின் உருவ பொம்மையை எரித்தும் உயிரோடு இருக்கிற தமிழ்நாட்டு முதல்வரை இறந்ததாக காரியம் செய்வதுமான இழிவான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம்: இதனைக் கண்டிக்கும் வகையிலும் தொடர்ந்து தமிழ்நாட்டுக்கு துரோகம் செய்கிற கர்நாடகா அரசைக் கண்டித்தும் அதற்கு துணை போகிற மத்திய பாசிச பாஜக அரசைக் கண்டித்தும் வரும் 30-ந் தேதி தமிழ்நாடு ஆளுநர் மாளிகை நோக்கி மாபெரும் பேரணியையும் முற்றுகையையும் நடத்த தமிழக வாழ்வுரிமைக் கட்சி அனைத்து தமிழர்களையும் அறைகூவல் விடுத்து அழைக்கிறது.
தமிழர்கள் பங்கேற்க அழைப்பு: இந்த மாபெரும் போராட்டத்தில் எம் அனைத்து தமிழ்ச் சாதி உறவுகளும் கலந்து கொண்டு இப்போராட்டத்தை வெற்றியடையச் செய்ய வேண்டும். வன்முறைக்கு சிறிதும் இடம் கொடுக்காமல் நமக்கான உரிமையை பெறுவதற்கு நாம் ஒன்று கூடுவோம்! வென்று காட்டுவோம்! வாருங்கள்! இவ்வாறு பண்ருட்டி தி.வேல்முருகன் எம்.எல்.ஏ. அழைப்பு விடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications