சூடுபிடிக்கிறது அதிமுக அலுவலக கலவர வழக்கு.. சிபிசிஐடி விசாரணை அதிகாரி நியமனம்.. பின்னணி
சென்னை: அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மோதல் மற்றும் கலவரம் குறித்து விசாரிப்பதற்காக சிபிசிஐடி விசாரணை அதிகாரியாக டிஎஸ்பி வெங்கடேசனை தமிழக அரசு நியமித்துள்ளது.
அதிமுகவில் ஒற்றை தலைமை கோஷம் எழுந்ததை அடுத்து எடப்பாடி பழனிசாமி தரப்புக்கும், ஓபிஎஸ் தரப்புக்கும் இடையே மோதல் உருவானது. தமிழகத்தின் பல பகுதிகளில் அதிமுகவினர் இரு தரப்புகளாக பிரிந்து மோதிக் கொண்ட சம்பவங்களும் அரங்கேறின. இதன் தொடர்ச்சியாக, யாருக்கு அதிமுக நிர்வாகிகளின் ஆதரவு அதிகம் இருக்கிறது என்ற போட்டி ஈபிஎஸ் - ஓபிஎஸ் இடையே ஏற்பட்டது. இதில் பெரும்பாலான மாவட்டச் செயலாளர்கள் ஈபிஎஸ் பக்கம் அணி திரண்டனர்.

இதையடுத்து, கடந்த ஜூன் மாதம் 23-ம் தேதி அதிமுக பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. மிகக் குறைந்த நிர்வாகிகளின் ஆதரவைப் பெற்றிருந்த போதிலும் இக்கூட்டத்தில் ஓபிஎஸ் பங்கேற்றார். ஆனால் அங்கு ஓபிஎஸ்-க்கு எதிராக கட்சித் தொண்டர்கள் பலர் கோஷமிடவே தனது ஆதரவாளர்களுடன் ஓபிஎஸ் அங்கிருந்து வெளியேறினார். அதே சமயத்தில், அந்தக் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் ஏதும் எடுக்கக் கூடாது என நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தடை உத்தரவு பெற்றதால் அந்தப் பொதுக்குழு வெறுமனே நடந்து முடிந்தது.
அதன் பின்னர், ஜூலை 11-ம் தேதி அதிமுக பொதுக்குழு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதனை தடுத்து நிறுத்த ஓபிஎஸ் கடுமையான சட்டப்போராட்டத்தில் ஈடுபட்ட போதிலும் பொதுக்குழு கூடுவதற்கு நீதிமன்றம் தடைவிதிக்க மறுத்துவிட்டது. இதனால் அறிவித்தப்படியே ஜூலை 11-ல் சென்னை வானகரத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் விமரிசையாக அதிமுக பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் தான் எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக
தேர்ந்தெடுக்கப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஓபிஎஸ் தரப்பினர் அதே நாளில் ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்துக்குள் அத்துமீறி நுழைய முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது ஈபிஎஸ் தரப்புக்கும் - ஓபிஎஸ் தரப்புக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டு கலவரமாக மாறியது. இதில் அதிமுக தலைமை அலுவலகம் சூறையாடப்பட்டது.
இதுகுறித்து தகலவறிந்ததும் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியை விட்டு நீக்கி அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், அதிமுக அலுவலகத்தில் இருந்த முக்கிய கோப்புகளை ஓபிஎஸ் ஆதரவாளர்கள் எடுத்துச் சென்றுவிட்டதாக ஈபிஎஸ் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது.
இந்தக் கலவரம் குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். பிறகு இந்த வழக்கை சிபிசிஐடிக்கு தமிழக அரசு அண்மையில் மாற்றி உத்தரவிட்டது. இந்நிலையில், இந்த வழக்கில் விசாரணை அதிகாரியாக சிபிசிஐடி டிஎஸ்பி வெங்கடேசன் என்பவரை தமிழக அரசு இன்று நியமித்துள்ளது. மேலும், அந்த விசாரணைக் குழுவில் ஆய்வாளர்கள் லதா, ரம்யா, ரேணுகா, செல்வின் ராஜ்குமார் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதனால் அதிமுக அலுவலக கலவர வழக்கு சூடிபிடிக்க தொடங்கி இருக்கிறது.












Click it and Unblock the Notifications