ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: ஆற்காடு சுரேஷின் தோழி பாஜக நிர்வாகி 'கஞ்சா' அஞ்சலைக்கு முக்கிய தொடர்பு?
சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழகத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஏற்கனவே 11 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் இன்று மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் திமுக நிர்வாகியின் மகன் சதீஷ், அதிமுக நிர்வாகி மலர்க்கொடி உள்ளிட்டோரும் அடக்கம். இதனிடையே ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஆற்காடு சுரேஷின் 'துணைவி' பாஜக நிர்வாகி புளியந்தோப்பு 'கஞ்சா' அஞ்சலைதான் முக்கிய குற்றவாளி என்கின்றன போலீஸ் வட்டாரங்கள்.
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5-ந் தேதி வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். சென்னையில் கொல்லப்பட்ட ரவுடி ஆற்காடு சுரேஷ் படுகொலைக்கு பழிவாங்கவே ஆம்ஸ்ட்ராங் கொல்லப்பட்டதாக கூறப்பட்டது. இந்த கொலை தொடர்பாக ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு உள்ளிட்ட 11 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டனர். இவர்களில் ரவுடி திருவேங்கடம் என்கவுண்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்த நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடைய மேலும் பலர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு வருகின்றனர். இவர்களில் திமுக நிர்வாகி ஒருவரது மகன் சதீஷ், அதிமுக நிர்வாகி மலர்க்கொடி ஆகியோர் இன்று கைது செய்யப்பட்டனர்.
இதனிடையே ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பாஜக நிர்வாகி புளியந்தோப்பு அஞ்சலை பெயர்தான் இப்போது அதிகமாக பேசப்படுகிறது.
வடசென்னையில் கஞ்சா விற்பனை தாதாவாக வலம் வருபவர் அஞ்சலை. கொல்லப்பட்ட ரவுடி ஆற்காடு சுரேஷின் காதலியாகவும் இருந்து பின்னர் திருமணமும் செய்து கொண்டவர். சென்னையில் 2019-ம் ஆண்டு அஞ்சலையை 'ரகசியமாக' சந்திக்க வந்த போது ஆற்காடு சுரேஷ் போலீசில் சிக்கி பின்னர் ஜாமீனில் வெளிவந்திருந்தார்.

இந்த அஞ்சலைதான் திடீரென பாஜகவில் இணைந்தார். தமிழ்நாடு பாஜகவின் வடசென்னை மாவட்ட மகளிர் அணி தலைவியுமானார் அஞ்சலை. அப்போதும் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.
இந்த நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பலரும் அஞ்சலையை நோக்கித்தான் கைகளை நீட்டுகின்றனராம். இதனால் அஞ்சலையின் அத்தனை தொடர்புகளும் இப்போது போலீசாரின் தீவிர வளையத்தில் இருக்கின்றனவாம்!












Click it and Unblock the Notifications