காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் மீது சிபிஐ புதிய வழக்கு.. 2005ல் நடந்த சம்பவம் என்ன?
சென்னை: முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரத்தின் மகனும், சிவகங்கை தொகுதி காங்கிரஸ் எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரம் மீது சிபிஐ புதிய வழக்கை பதிவு செய்துள்ளது. மதுபான நிறுவனமான டியாஜியோ ஸ்காட்லாந்தின் விஸ்கிக்கு இந்தியாவில் விதிக்கப்பட்ட தடையை நீக்குவதற்கு லஞ்சம் பெற்றதாக கூறப்படும் குற்றச்சாட்டின் அடிப்படையில் கார்த்தி சிதம்பரம் மீது சிபிஐ புதிய ஊழல் வழக்கைப் பதிவு செய்துள்ளது
பொதுவாக இந்தியாவில், 'டூட்டி பிரீ' எனப்படும் வரியில்லாத வெளிநாட்டு மதுபானங்களை விற்பதற்கு, இந்திய சுற்றுலா மேம்பாட்டு கழகமே அனுமதி அளிக்கும். கடந்த 2005ம் ஆண்டு ஏப்ரல் மாதம், இந்தியாவில் டியாஜியோ குழுமத்தின் வரி இல்லாத தயாரிப்புகளின் விற்பனைக்கு தடை விதித்தது. இதன் காரணமாக பிரிட்டனை சேர்ந்த மது தயாரிப்பு நிறுவனமான டியாஜியோ ஸ்காட்லாந்திற்கு பெரும் இழப்பு ஏற்பட்டது. ஏனெனில் இந்தியாவில் அதன் 70% வணிகம் ஜானி வாக்கர் விஸ்கி விற்பனையுடன் தொடர்புடையது என்று கூறப்படுகிறது.

இந்த தடையை நீக்குவது தொடர்பாக அப்போது நிதியமைச்சராக இருந்த ப சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தின் உதவியை, அந்த நிறுவனம் நாடியதாக சிபிஐ குற்றம்சாட்டிள்ளது. இதற்காக, கார்த்தி பி. சிதம்பரம் மற்றும் அவரது ஆடிட்டரான எஸ். பாஸ்கர ராமனால் நடத்தப்படும் 'அட்வான்டேஜ் ஸ்டார்டஜிக் கன்சல்டிங்' என்ற நிறுவனத்தை பிரிட்டன் நிறுவனமான டியாஜியோ ஸ்காட்லாந்து நிறுவனம் அணுகியதாகவும், இதற்காக இந்திய மதிப்பில் ஆலோசனை என்ற பெயரில் 13 லட்சம் ரூபாயை கட்டணமாக அனுப்பப்பட்டுள்ளது என்றும் சிபிஐ அதிகாரிகள் கூறினார்கள்.
அதாவது அட்வான்டேஜ் ஸ்ட்ராடஜிக் கன்சல்டிங் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு, டியாஜியோ ஸ்காட்லாந்து மற்றும் சீக்வோயா கேபிடல்ஸ் நிறுவனங்களால் சந்தேகத்திற்கிடமான முறையில் பணம் செலுத்தப்பட்டிருப்பதாக நம்புவதாகவும். இதற்காக வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முறைகேட்டில், கார்த்தி மற்றும் அவருடைய ஆடிட்டரான பாஸ்கர்ராமன் ஆகியோருக்கு தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் ப.சிதம்பரம் மத்திய உள்துறை அமைச்சராக இருந்த போது அவரது மகன் கார்த்தி சிதம்பரம் பரிந்துரையின் பேரில் சீனாவை சேர்ந்த 263 பேருக்கு சட்டவிரோதமாக விசா வழங்கப்பட்டதாக கூறி சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது. இதற்காக கடந்த 2022ம் ஆண்டு ப.சிதம்பரம் மற்றும் அவரது மகனும், காங்கிரஸ் எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரத்திற்கு சொந்தமான இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். இந்த விவகாரத்தில் கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டரான பாஸ்கர ராமன் அப்போது சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். அதேநேரம் ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்தில் அந்நிய முதலீடுக்கான அனுமதி பெற்று தந்ததில் முறைகேடு தொடர்பாக கார்த்தி சிதம்பரம் கடந்த 2018ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். இதே விவகாரத்தில் ப சிதம்பரமும் அப்போது கைது செய்யப்பட்டார்.












Click it and Unblock the Notifications