TVK Vijay: கரூர் தவெக அலுவலகத்திற்கு விரைந்த சிபிஐ! விஜய்யிடம் விசாரணை நடத்தப்படுகிறதா?
சென்னை: சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி அலுவலகத்திற்கு கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தை விசாரிக்க, ஒரு சிபிஐ அதிகாரி வருகை தந்துள்ளார். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு எழுந்துள்ளது.

கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி தவெக சார்பில் தேர்தல் பிரச்சாரம் நடந்தது. இந்த பிரச்சாரத்தில் பேச விஜய் சென்றிருந்தார். அவர் தாமதமாக சென்றதாக கூறப்படுகிறது.
மேலும் பிரச்சார வாகனத்தில் இருந்து சிறிது நேரம் கழித்தே அவர் மேலே வந்தார். இதனால் ரசிகர்கள் முண்டியடித்தனர் என்றும் கூறப்படுகிறது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள் என 41 பேர் பலியாகிவிட்டனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்த சம்பவம் குறித்து தமிழக அரசு சார்பில் ஒரு நபர் கமிஷன் அமைக்கப்பட்டது. அது போல் வேறு ஒரு வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் சிறப்பு புலனாய்வு குழுவையும் அமைத்திருந்தது.
இந்த குழுவை எதிர்த்து தவெகவினர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அப்போது நீதிபதிகள், கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தை சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டனர். மேலும் சிபிஐ விசாரணையை ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி கண்காணிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.
இந்த நிலையில் கரூர் வழக்கில் முதல் கட்ட விசாரணையை நிறைவு செய்த அதிகாரிகள் குழு, தற்போது இரண்டாம் கட்ட விசாரணையை தீவிரப்படுத்தி வருகிறது. அதன்படி கடந்த 31 ஆம் தேதி சிபிஐ ஏஎஸ்பி மகேஷ் குமார், சிபிஐ எஸ்பி பிரவீன் குமார், டிஎஸ்பி ராமகிருஷ்ணன், ஆய்வாளர் மனோகரன் உள்ளிட்ட 15 பேர் கொண்ட சிறப்பு அதிகாரிகள் குழு, கரூர்-ஈரோடு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வேலுச்சாமிபுரம் பகுதிக்கு வந்தடைந்தனர்.
அவர்கள் விஜய் பிரச்சாரம் மேற்கொண்ட இடத்தை நேரில் ஆய்வு செய்து, அங்கிருந்த சாலை அமைப்பு, பாதை அகலம், பேருந்து நிறுத்தங்கள், கடைத்தெருக்கள் உள்ளிட்ட பகுதிகளை முழுமையாக ஆய்வு செய்து பதிவுகளை திரட்டினர்.
மேலும் அங்குள்ள கடைகள், பெட்ரோல் பங்க் உள்ளிட்ட இடங்களில் உள்ள சிசிடிவி காட்சிகளையும் அவர்கள் சேகரித்தனர். அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்களிடம் சம்பவ இடத்தில் நேரடியாக விசாரித்தனர்.
இந்த நிலையில் பனையூரில் உள்ள தவெக கட்சி அலுவலகத்திற்கு சிபிஐ அதிகாரி ஒருவர் வருகை தந்துள்ளார். அவர் விஜய் பயன்படுத்திய பிரச்சார வாகனத்தை ஆய்வு செய்து வருகிறார். மேலும் தவெக அலுவலகத்தில், கரூர் கூட்டம் குறித்த சில ஆவணங்களையும் அந்த அதிகாரி கேட்டு வருகிறார். விஜய்யிடம் விசாரணை நடத்தப்படுமா என தெரியவில்லை.












Click it and Unblock the Notifications