மீண்டும் கார்த்தி சிதம்பரம் வீட்டு கதவை தட்டிய சிபிஐ.. அப்போ சாவி கிடைக்கல.. விடாமல் வந்து ரெய்டு!
சென்னை : நுங்கம்பாக்கத்தில் உள்ள கார்த்தி சிதம்பரம் வீட்டில் சி.பி.ஐ அதிகாரிகள் இன்று திடீர் சோதனை நடத்தி வருகின்றனர். அந்த வீட்டின் ஒரு அறையில் இருந்த பீரோவை 6 அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.
விசா முறைகேடு வழக்கு தொடர்பாக கார்த்தி சிதம்பரம் வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் கடந்த மே மாதம் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
அப்போது சோதனை நடத்தாமல் விட்டுப்போன, பீரோவை சுமார் இரண்டு மாதங்கள் கழித்து இன்று சிபிஐ அதிகாரிகள் சோதனை போட்டு வருகின்றனர்.

சிபிஐ வழக்கு
சீனர்களுக்கு முறைகேடாக விசா பெற்றுத் தந்ததாக காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் மீது சி.பி.ஐ வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கில், கார்த்தி சிதம்பரம் 2வது குற்றவாளியாக சிபிஐயால் சேர்க்கப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரத்துக்கு சொந்தமான இடங்களில் சி.பி.ஐ அதிகாரிகள் கடந்த மே மாதம் சோதனை நடத்தினர்.

ஆடிட்டர் கைது
மேலும், இதுகுறித்து கார்த்தி சிதம்பரத்திடம் நேரிலும் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதையடுத்து, இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்ட கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கர ராமன் கைது செய்யப்பட்டார்.

இன்று சிபிஐ ரெய்டு
இந்நிலையில், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ப.சிதம்பரம் வீட்டில் உள்ள ஒரு அறையில் 6 பேர் கொண்ட சி.பி.ஐ அதிகாரிகள் இன்று திடீர் சோதனை நடத்தினர். கடந்த முறை இந்த வீட்டில் சோதனை நடந்தபோது, அந்த அறையில் உள்ள ஒரு பீரோவின் சாவி லண்டன் சென்ற கார்த்தி சிதம்பரத்தின் மனைவியிடம் இருந்ததால் சோதனை நடத்தப்படவில்லை.

பீரோ சாவி
தற்போது அவர்கள் வந்த பிறகு அவர்களிடம் சாவியை பெற்று சி.பி.ஐ அதிகாரிகள் இன்று சோதனை நடத்தி வருகின்றனர். சிபிஐ அதிகாரிகள், ப.சிதம்பரத்தின் வீட்டில் உள்ள பீரோவில் சோதனை நடத்தியபோது, ப.சிதம்பரம் மற்றும் கார்த்தி ஆகியோர் வீட்டில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications