CBSE 10th results: சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வில் தமிழகத்தின் தேர்ச்சி சதவீதம் எவ்வளவு?
சென்னை: சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் நேற்று வெளியான நிலையில் தமிழகத்தில் இந்த முறை தேர்ச்சி சதவீதம் அதிகரித்துள்ளது. அதாவது 99.92 சதவீதம் ஆகும். கடந்த ஆண்டு 99.89 சதவீதமாக இருந்தது.
சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு தேர்வுகள் கடந்க பிப்ரவரி 17-ஆம் தேதி முதல் மார்ச் 11-ஆம் தேதி வரை நடந்து முடிந்தது. நாடு முழுவதும் நடத்தப்பட்ட இந்த தேர்வில் 25,08,319 மாணவர்கள் தேர்வு எழுதினர். இதில் 14,08,546 மாணவர்களும், 10,99,773 மாணவிகளும் அடங்குவர். நாடு முழுவதும் 8,075 தேர்வு மையங்களில் 83 பாடங்களுக்குத் தேர்வுகள் நடத்தப்பட்டன.

அது போல் தமிழகத்தை எடுத்துக் கொண்டால் 60,730 மாணவர்களும் 50,873 மாணவிகளும் 10ஆம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வு எழுதினர். இந்த நிலையில் நேற்றைய தினம் சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியானது. இந்த ஆண்டு இந்தியாவில் 93.70 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
அது போல் தமிழகத்தில் 99.92 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதில் மாணவிகள் 99.96 சதவீதம் பேரும் மாணவர்கள் 99.90 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டை காட்டிலும் அதிகம். சென்னையில் பெரும்பாலான பள்ளிகளில் 100 சதவீதம் தேர்ச்சி விகிதம் இருக்கிறது.
தமிழகத்தில் 1544 பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் மாநிலம் முழுவதும் 360 மையங்களில் தேர்வு எழுதினர். கணித பாடத்தின் வினாத்தாள் கடினமாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்திருந்த நிலையில் அதில் அவர்கள் தேர்ச்சி பெற்றதால் நிம்மதி அடைந்துள்ளனர்.
தற்போது முதல் வாரிய தேர்வு முடிவுகளே வெளியாகின. இது அனைத்து மாணவர்களுக்கும் கட்டாயமானது. இரண்டாம் வாரிய தேர்வு விருப்பத் தேர்வாக வழங்கப்படுகிறது. மாணவர்கள் தங்கள் மதிப்பெண்களை மேம்படுத்திக் கொள்ள இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த தேர்வு மே 15 ஆம் தேதி முதல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறும்.
பாடத்திட்டத்தில் எவ்வித மாற்றமும் இன்றி நடத்தப்படும் இந்த தேர்வில் அதிகபட்சமாக 3 பாடங்களில் மதிப்பெண் மேம்பாட்டிற்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். முதல் தேர்வில் இரு பாடங்களில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் கம்பார்ட்மென்ட் பிரிவில் வைக்கப்பட்டு அவர்கள் இந்த இரண்டாவது தேர்வில் பங்கேற்கத் தகுதி உடையவர்கள் ஆவர்.
ஆனால் 3 அல்லது அதற்கு மேற்பட்ட பாடங்களில் தோல்வியடைந்த அல்லது தேர்வுக்கு வராத மாணவர்கள் இரண்டாவது தேர்வை எழுத முடியாது. அவர்கள் 2027 ஆம் ஆண்டு நடக்கும் முதன்மைத் தேர்வில் மட்டுமே பங்கேற்க முடியும். இதனால் இரண்டாவது வாரிய தேர்வில் கணக்கு பாடத்தை எழுதி மேலும் கூடுதல் மதிப்பெண்களை பெற பலர் ஆர்வமாக இருக்கிறார்கள்.
இதுகுறித்து கல்வியாளர்கள் கூறுகையில், கணித வினாத்தாளில் 5 மதிப்பெண்களுக்கான கேள்விகள் சற்று கடினமாக இருந்தது. அதனால் இந்த முறை கணிதத்தில் 100 சதவீதம் மதிப்பெண் பெறுவது குறைந்துள்ளது. பெரும்பாலான மாணவர்கள் அவர்களது கணித மதிப்பெண்களால் அதிருப்தியில் இருப்பதால் இரண்டாவது தேர்வுக்கு தயாராகி வருகிறார்கள். இதனால் ஆசிரியர்களுக்கு கோடை விடுமுறை இல்லை என்றனர். இரண்டாம் கட்ட தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 20ஆம் தேதி கடைசி நாளாகும்.














Click it and Unblock the Notifications