CBSE Plus 2 results 2025: சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு! 88 சதவீதம் பேர் தேர்ச்சி
சென்னை: தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன. இதில் 88.39 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டை விட 0.41 சதவீதம் பேர் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்கள் கடந்த 8ஆம் தேதி வியாழக்கிழமை வெளியான முடிவுகளால் தாங்கள் கணிதம், இயற்பியல், வேதியியல் பாடங்களில் பெற்ற கட் ஆஃப் மதிப்பெண்களை கொண்டு எந்த கல்லூரியில் கவுன்சிலிங்கில் இடம் கிடைக்கும் என்பதை யூகிக்கக் கூடும்.

இதே போல் சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்களும் தங்களது கட் ஆஃப் குறித்து அச்சத்தில் உள்ளனர். பிளஸ் 2 சிபிஎஸ்இ தேர்வை பொருத்தமட்டில் இயற்பியல் தேர்வு கடினமாகவும் நீளமாகவும் இருந்ததால் தங்களால் ஒரு சில கேள்விகளுக்கு விடையளிக்க முடியவில்லை என்றும் தெரிவித்திருந்தனர்.
பிளஸ் 2 தேர்வுகளை பொருத்தமட்டில் கடந்த பிப்ரவரி 15 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 4ஆம் தேதி முடிந்தது. இந்த ஆண்டு இந்தியா மற்றும் 26 நாடுகளில் 7,842 தேர்வு மையங்களில் 42 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதியிருந்தனர்.
இந்த தேர்வு முடிவுகள் விரைவில் வெளியாகும் என டிஜிலாக்கரில் குறிப்பிடப்பட்டுள்ளது. நேற்றைய தினம் முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில் நேற்றைய தினம் புத்த பூர்ணிமா அரசு விடுமுறை என்பதால் இன்று அல்லது நாளை வெளியாகுமா என்ற கேள்வி எழுந்தது.
இந்த நிலையில் இன்று காலை 11.30 மணிக்கு பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகின. இதில் 88.39 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். சென்னை மண்டலத்தில் 97.39 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அது போல் அதிகபட்சமாக விஜயவாடாவில் 99.60 சதவீதம் பேரும், குறைந்தபட்சமாக பிரயக்ராஜில் 79.53 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.












Click it and Unblock the Notifications