சென்னையில் பூட்டிய வீட்டில் சடலமாக கிடந்த சிபிஎஸ்இ அதிகாரி! மூக்கில் வழிந்த ரத்தம்! நடந்தது என்ன?
சென்னை: சென்னை அண்ணா நகர் பகுதியில் பூட்டிய வீட்டில் சிபிஎஸ்இ மண்டல அதிகாரி ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னைக்கு மாற்றலாகி வந்த ஒரே மாதத்தில் இந்த சோகமான சம்பவம் நடந்துள்ளது.
சென்னை அண்ணா நகர் ஐ பிளாக் பகுதியில் வசித்து வந்தவர் மகேஷ் ஸ்ரீ தர்மாதிகாரி (57). திருமங்கலம் பகுதியில் இயங்கி வரும் சிபிஎஸ்இ அலுவலகத்தில் மண்டல அலுவலகராக பணியாற்றி வந்தார்.

திருவனந்தபுரத்தில் பணியாற்றி வந்த அவர் ஜூலை 7ஆம் தேதி டிரான்ஸ்பராகி சென்னை திருமங்கலத்தில் உள்ள சிபிஎஸ்இ அலுவலகத்தில் மண்டல அலுவலராக பொறுப்பேற்றார். அவரது குடும்பத்தினர் மகாராஷ்டிரா மாநிலத்தில் வசித்து வருகிறார்கள்.
மகேஷ், வழக்கம் போல் பணியை முடித்துக் கொண்டு நேற்று மாலை அண்ணா நகரில் உள்ள தனது வீட்டுக்கு வந்தார். நேற்று காலை 9 மணிக்கு நுங்கம்பாக்கத்தில் உள்ள பிரபல தனியார் பள்ளியில் நடந்த நிகழ்விலும் அவர் பங்கேற்க இருந்தாராம்.
இதற்காக மண்டல அலுவலர் மகேஷை அழைத்துச் செல்ல பள்ளி ஊழியர் தண்டாயுதபாணி அவரது வீட்டின் வாயிலில் காலை 8 மணி முதல் காத்திருந்தாராம். ஆனால் 10 மணி ஆகியும் அவரிடம் இருந்து எந்த தகவலும் வரவில்லை. மேலும் போன் செய்த போதிலும் போனை எடுக்கவில்லை. கதவும் திறக்கப்படவில்லை.
இதனால் சந்தேகமடைந்த தண்டாயுதபாணி திருமங்கலத்தில் உள்ள சிபிஎஸ்இ அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தாராம். உடனே சிபிஎஸ் உதவிச் செயலாளர் பரமசிவம், மண்டல ஊழியர்கள் அவரது வீட்டிற்கு வந்து கதவை தட்டினர். ஆனாலும் அவர் திறக்கவில்லை. போன் போட்டனர். போனையும் எடுக்கவில்லை.
இதையடுத்து அவர்கள் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்த போது மூக்கில் ரத்தம் வழிந்த நிலையில் மகேஷ் சடலமாக கிடந்தாராம். இது குறித்து திருமங்கலம் காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு வருகை தந்த திருமங்கலம் போலீஸார், மகேஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் நெஞ்சு வலி காரணமாக இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது. எனினும் அவருடைய பிரேத பரிசோதனை முடிவுகள் வந்தால் மட்டுமே அவர் எப்படி இறந்தார் என்பது தெரியவரும் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.
இவருடைய இறப்பு குறித்து அவருடைய குடும்பத்தினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அவர்கள் வந்தால் மகேஷுக்கு உடல்நிலையில் ஏதேனும் பிரச்சினை இருந்ததா என தெரியவரும். பூட்டிய வீட்டில் சிபிஎஸ்இ அதிகாரி சடலமாக கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications