பள்ளிக் கட்டணத்தை இனி மறைக்க முடியாது.. சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு கிடுக்குப்பிடி.. பெற்றோரே உஷார்!
டெல்லி: சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு கடிவாளம் போடும் வகையில் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் முக்கியமான உத்தரவை போட்டுள்ளது. இன்னும் 30 நாட்களில் சிபிஎஸ்இ பள்ளி நிர்வாகம் தங்கள் பள்ளி தொடர்பான அத்தனை விவரங்களையும் அந்தந்தப் பள்ளியின் இணையதளத்தில் பொதுமக்களின் பார்வைக்கு வெளிப்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
தை மாதம் பிறந்துள்ள சூழலில், பெற்றோர் பலரும் தங்களின் குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதற்கான பணிகளை தொடங்கி இருக்கின்றனர். பள்ளியில் சேர்ப்பதற்கான விண்ணப்பம், பள்ளிக் கட்டணம், பேருந்து கட்டணம், பள்ளியின் உட்கட்டமைப்பு உள்ளிட்ட எந்தவித விஷயங்களையும் பள்ளிகள் வெளியிடாமல் இருப்பதாக சில புகார்கள் எழத் தொடங்கிவிட்டன.

அந்த புகார்களை களையும் பட்சத்தில் சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அதன்படி இனி பள்ளி தொடர்பான அத்தனை விவரங்களையும் அந்தந்த பள்ளிகள் இணையதளத்தில் வெளியிட்டு பொதுமக்களின் பார்வைக்கு வைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக பள்ளியின் இணையதளத்தில் Mandatory Public Disclosure என்ற பெயரில் தனியாக ஒரு லிங்க் கொடுக்கப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன்படி பள்ளியில் வசூலிக்கப்படும் முழு கட்டணமும் வெளிப்படையாக கூறப்பட்டிருக்க வேண்டும். அட்மிஷனின் போது ஒரு கட்டணத்தையும், பின்னர் ஒரு கட்டணத்தையும் இனி பெற முடியாது.
அதேபோல் பள்ளியின் கட்டமைப்பை முழுமையாக வெளிப்படுத்தி இருக்க வேண்டும். அதாவது பள்ளியின் ஆய்வகங்கள், விளையாட்டு மைதானம், இணைய வசதி, பேருந்து வசதி, விளையாட்டு உபகரணங்கள் உள்ளிட்டவை குறித்து கூறப்பட்டிருக்க வேண்டும். அதேபோல் தீயணைப்பு சான்றிதழ், கட்டட உறுதித்தன்மை சான்றிதழ், சுகாதாரம் மற்றும் குடிநீர் சான்றிதழ் ஆகியவை அப்டேட் செய்யப்பட்டுள்ளதா என்பதை தெரிவிக்க வேண்டும்.
அதுமட்டுமல்லாமல் பள்ளியின் ஆசிரியர்கள் எண்ணிக்கை, அவர்களின் கல்வித் தொகுதி தொடர்பான விவரங்களை பதிவிட வேண்டும். அதேபோல் மாணவர்கள் எண்ணிக்கையை கண்காணிக்கவும் ஒவ்வொரு வகுப்பிலும் எத்தனை மாணவர்கள் படிக்கிறார்கள் என்ற விவரங்களை பதிவிட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுதொடர்பான அத்தனை விவரங்களையும் சிபிஎஸ்இ பள்ளிகள் இன்னும் 30 நாட்களில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த 30 நாட்களில் விவரங்களை வெளியிடாத பள்ளிகள் மீது சிபிஎஸ்இ இணைப்பு விதிகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனால் இனி பெற்றோர் ஒவ்வொரு பள்ளிக்கும் சென்று பள்ளியின் கட்டணம், மாணவர்கள் எண்ணிக்கை, ஆசிரியர்களின் கல்வித் தொகுதி உள்ளிட்டவை தொடர்பாக நேரில் சென்று விசாரிக்க வேண்டிய அவசியமே இல்லை. ஒவ்வொரு பள்ளியின் இணையதளத்தில் Mandatory Public Disclosure என்ற லிங்க் மூலமாக வீட்டில் இருந்தவாறே அறிந்து கொள்ள முடியும்.












Click it and Unblock the Notifications