நாட்டையே அதிர வைத்த கொலை..சுவாதியை மறக்க முடியுமா? சிசிடிவி கேமரா என்னாச்சு? கோர்ட்டில் அரசு விளக்கம்
சென்னை: பொது இடங்களில் மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் சிசிடிவி கேமரா மற்றும் ஜிபிஎஸ் கருவிகள் பொருத்தும் பணிகளை மேற்கொண்டுள்ளதாக தமிழ்நாடு அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் விளக்கம் அளித்து உள்ளது.
கடந்த 2016 ஆம் ஆண்டு தமிழ்நாட்டையே உலுக்கிய சம்பவம் என்றால் அது சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் மென் பொறியாளர் சுவாதி கொடூரமாக கொல்லப்பட்டதுதான். அந்த ஆண்டின் ஜூன் மாதம் பணிக்கு சென்றுகொண்டு இருந்த சுவாதியை மர்ம நபர் கொடூரமாக வெட்டிக் கொன்றதை யாராலும் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது.

ஆனால், அந்த ரயில் நிலையத்தில் கண்காணிப்பு கேமராக்கள் இல்லாதது குற்றவாளியை கண்டுபிடிப்பது பெரும் தொய்வை ஏற்படுத்தியது. இதில் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட ராம்குமாரும் சிறையிலேயே மர்மமான முறையில் உயிரிழந்தார். அவர் தற்கொலை செய்துகொண்டதாக காவல்துறை தெரிவித்தது.
இந்த நிலையில் பொது இடங்களில் கண்காணிப்பு கேமராக்களில் உள்ள குறைபாடுகளை களைந்து, பொது இடங்களில் கூடும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிபடுத்தும் வகையில் தாமாக முன்வந்து வழக்கை விசாரிக்க வேண்டுமென மூத்த நீதிபதியாக இருந்த என்.கிருபாகரன் சென்னை உயர் நீதிமன்றத்திடம் கோரிக்கை வைத்திருந்தார்.
அதனை ஏற்று அப்போதைய தலைமை நீதிபதி அமர்வு பொது நல வழக்கை விசாரணைக்கு எடுத்து விசாரித்து வருகிறது. அந்த வழக்கு தற்போதைய தலைமை நீதிபதி சஞ்சய் கங்கபுர்வாலா, நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாடு அரசு தரப்பில் அரசு ப்ளீடர் P.முத்துக்குமார் ஆஜரானார்.
அவர், பொதுமக்கள் கூடும் அனைத்து இடங்களிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு வருவதாகவும், இந்த சம்பவம் நடந்த ஓராண்டில் 69 சதவீத இடங்களில் பொருத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. ஆட்டோ, கால் டாக்சி ஆகியவற்றிலும் ஜிபிஎஸ் கருவிகளை பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
தற்போதைய நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் வேண்டுமெனவும் கோரிக்கை வைக்கப்பட்டது. இதை பதிவு செய்த நீதிபதிகள், பாதுகாப்பு நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கும், ரயில்வே துறைக்கு அவகாசம் வழங்கி வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 11ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர். இந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் எவ்வளவு நாட்களில் முடிக்கப்படும் என்பதையும் அறிக்கையில் தெரிவிக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டு உள்ளனர்.












Click it and Unblock the Notifications