செல்போன் ஒட்டுக்கேட்பு.. மீண்டும் எமர்ஜென்சி.. பாஜக தோல்வியை தடுக்க முடியாது.. முதல்வர் ஸ்டாலின்
சென்னை: எதிர்கட்சி உறுப்பினர்களின் செல்போன்களை ஒட்டுக்கேட்கும் வேலையை பாஜக தொடங்கியிருக்கிறது என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். என்ன செய்தாலும் பாஜக தோல்வியடையும் என்றும் இந்தியா கூட்டணியின் வெற்றியை தடுக்க முடியாது என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை திருவான்மியூரில் எம்.எல்.ஏ. கிருஷ்ணசாமி இல்ல திருமண நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார் அப்போது பேசிய அவர், 1967-ல் தமிழ்நாட்டில் திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்று அண்ணா முதல்வரானார். இந்திராகாந்தி ஆட்சியில் எமர்ஜென்சியை எதிர்க்க கூடாது என டெல்லியில் இருந்து தூது வந்தது. ஜனநாயகத்திற்காக எமர்ஜென்சி நிலையை எதிர்த்து ஆட்சியை இழந்தது திமுக என்று முதலமைச்சர் குறிப்பிட்டார்.

ஆட்சியை விட ஜனநாயகத்திற்கே முக்கியத்துவம் கொடுத்தது திமுக என்று கூறிய முதல்வர் ஸ்டாலின், தற்போது ஜனநாயகத்திற்கு மீண்டும் ஆபத்து வந்துள்ளதாக குறிப்பிட்டார். பாஜகவிற்கு தோல்வி பயம் வந்து விட்டது என்று கூறிய முதல்வர் ஸ்டாலின்,5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அனைத்து மாநிலங்களிலும் பாஜக தோல்வியடையும் என்ற தகவல் வருகிறது. ஏற்கனவே அமலாகத்துறை, வருமான வரித்துறையை ஏவியவர்கள் தற்போது செல்போன்களை ஒட்டு கேட்கின்றனர்.
இந்தியா கூட்டணி கட்சி தலைவர்களின் செல்போன்கள் ஒட்டு கேட்கப்பட்டுள்ளன. ஒட்டுக்கேட்பு தொடர்பாக செல்போன் நிறுவனமே எச்சரிக்கை செய்தி அனுப்பியுள்ளது. ஒட்டு கேட்பு புகார் குறித்து விசாரணை கமிஷன் அமைக்கப்படும் என்று மத்திய அமைச்சர் கூறியுள்ளார். செய்வதையும் செய்துவிட்டு விசாரணை நடத்தப்படும் என்று கூறும் நிலையில் தான் நாடு உள்ளது என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
என்ன செய்தாலும் பா.ஜ.க. தோல்வியை தவிர்க்க முடியாது, இந்தியா INDIA கூட்டணி வெற்றி பெறும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஜனநாயகம் பாதுகாக்கப்படுமா, மக்களாட்சி நீடிக்குமா என்ற நிலையில்தான் இன்றைக்கு சூழல் அமைந்திருக்கிறது. தனக்கு எதிராக கருத்து கூறுபவர்களை மத்திய பாஜக அரசு மிரட்டுகிறது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications