சோஷியல் மீடியாக்களில் பரவிய தீ! சென்சார் போர்டு தடையால் எக்குத்தப்பாக ஷேர் ஆகும் அண்ணாவின் புத்தகம்
சென்னை: சுதா கொங்கரா இயக்கத்தில் வெளிவந்திருக்கும் பராசக்தி திரைப்படம், நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்நிலையில் இந்த திரைப்படத்தில் சென்சார் போர்டு, பல காட்சிகளை வெட்ட சொல்லியிருக்கிறது. குறிப்பாக அண்ணாவின், 'தீ பரவட்டும்' என்கிற வாசகத்தை மாற்ற சொன்னது. இந்நிலையில், அண்ணா எழுதிய 'தீ பரவட்டும்' புத்தகம் தற்போது சோஷியல் மீடியாக்களில் பரவலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.
பராசக்தி திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகியுள்ளது. இன்று திரைப்படம் வெளியாக இருந்த நிலையில், நேற்று மதியம் வரை திரைப்படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்கப்படாமல் இருந்தது. பல காட்சிகளை வெட்டி நீக்கவும், சில காட்சிகளை மாற்றியமைக்கவும் சென்சார் போர்டு உத்தரவிட்டிருந்தது.

அண்ணாவின் புத்தகம்
இந்த திரைப்படம், இந்தி மொழி திணிப்புக்கு எதிரான போராட்டத்தை மையப்படுத்திய படம். எனவே, இந்தி மொழி ஆதிக்கத்திற்கு எதிரான வாசகங்கள் இடம் பெற்றிருந்தன. இப்படி இருக்கையில், 'தீ பரவட்டும்','இந்தி என் கனவை அழித்தது' என்கிற வாசகங்களை நீக்க வேண்டும், மாற்றியமைக்க வேண்டும் என்று சென்சார் போர்டு உத்தரவிட்டது. எனவே தீ பரவட்டும் என்கிற வாசம், 'நீதி பரவட்டும்' என மாற்றப்பட்டிருக்கிறது. படத்தில் எங்கெல்லாம் தீ பரவட்டும் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறதோ, அங்கெல்லாம் நீதி பரவட்டும் என மாற்றப்பட்டிருக்கிறது.
என்னென்ன கட்?
மேலும் 'இந்தி என் கனவை அழித்தது' என்கிற வாசகத்தையும் மாற்ற கோரப்பட்டது. இந்த வாசகம், 'என் ஒரே கனவை இந்தி திணிப்பு எரித்தது' என்று மாற்றப்பட்டது. இத்துடன் நிற்கவில்லை, 'இந்தி கத்துக்கிட்டு' என்கிற வார்த்தையை மியூட் செய்யவும், 'இந்தி அரக்கி' என்கிற வார்த்தையில் அரக்கிக்கு பதில் வேறு வார்த்தையை பயன்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டது. இதனையடுத்து திரைப்படத்திற்கு நேற்று மதியம் U/A சான்றை சென்சார் போர்டு வழங்கியிருந்தது.
மேலோட்டமாக பார்த்தால் இந்த விஷயத்தில் என்ன பிரச்சனை? சாதாரண மேட்டர்தானே! என்பதை போல தோன்றும். ஆனால் விஷயம் இருக்கிறது. தீ பரவட்டும் என்பது அண்ணா எழுதிய புத்தகம்.
ராமாயணம் குறித்து விவாதம்
ராமாயணம் குறித்து பேரறிஞர்கள் நான்கு பேர் நிகழ்த்திய விவாதம்தான் இந்த புத்தகம். கம்பன் காவியம் எப்படிப்பட்டது? அதனால் என்ன யூஸ்? அது நாட்டுக்கு செய்த நன்மை என்ன? தீமை என்ன? என்பதை பற்றி நால்வரும் விவாதித்திருக்கிறார்கள். இந்த பின்னணியில்தான் இந்த வார்த்தைக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதாக அரசியல் விமர்சர்கள் கூறுகிறார்கள்.
பரவிய தீ
கடந்த காலங்களில் வெளியான, சர்ச்சைக்குரிய சில படங்களை பாருங்கள். தி காஷ்மீர் ஃபைல்ஸ் மற்றும் தி கேரளா ஸ்டோரி ஆகிய திரைப்படங்கள் பெரிய அளவில் வெட்டுக்களை சந்திக்கவில்லை. காரணம் அது வலதுசாரி சித்தாந்தத்தை உயர்த்திப்பிடிப்பதாக இருந்தது என்று அரசியல் விமர்சர்கள் கூறுகின்றனர். இப்படி இருக்கையில் தணிக்கை வாரியத்தின் தடை காரணமாக, அண்ணாவின் தீ பரவட்டும் என்கிற புத்தகத்தின் PDF பதிப்பை, திமுக ஆதரவாளர்கள் சோஷியல் மீடியாக்களில் பரவலாக ஷேர் செய்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications