புதுச்சேரி ஜிப்மரில் மருந்து தட்டுப்பாடு.. மத்திய அரசே.. ராமதாஸ் அவசர கோரிக்கை
சென்னை: புதுச்சேரி, ஜிப்மர் மருத்துவமனையில் நிலவி வரும் மருந்து தட்டுப்பாட்டைபோக்க, மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
புதுச்சேரி மாநிலம் கோரிமேடு பகுதியில் அமைந்துள்ள மத்திய அரசின் ஜிப்மர் மருத்துவமனையில், நாள்தோறும் சிகிச்சைக்காக ஏராளமானோர் வருகை தருகிறார்கள். இந்த மருத்துவமனையில், கடந்த 2 ஆண்டுகளாக மருந்து பற்றாக்குறை நிலவி வருகிறது. குறிப்பாக, நீரழிவு, இதய நோய், சிறுநீரக பிரச்சனை, நரம்பு பிரச்சனை உள்ளிட்ட நோய்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வந்த மருந்து, மாத்திரைகளை, தட்டுப்பாடு காரணமாக மருத்துவமனை நிர்வாகம் நிறுத்தியது. இதனால், ஏழை - எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
பன்னீர்செல்வம் என் கையை நீட்ட சொன்னார்.. நானும் நீட்டினேன்.. அப்ப திடீர்னு
மருத்துவமனை நிர்வாகம் சுற்றிக்கை
இதனையடுத்து எழுந்த புகாரின் அடிப்படையில், கையிருப்பில் உள்ள மருந்துகளை மட்டும் பரிந்துரைக்க வேண்டும் என்றும், இருப்பில் இல்லாத மருந்துகளை வெளியில் பணம் செலுத்தி வாங்கிக்கொள்ளுமாறு குறிப்பிட்டு, தனிச்சீட்டில் எழுதி கொடுக்குமாறும், ஜிப்மர் மருத்துவ கண்காணிப்பாளர், அனைத்து துறைத் தலைவர்களுக்கும் சுற்றிக்கை அனுப்பியுள்ளார்.
இந்நிலையில், ஜிப்மர் மருத்துவமனையில் நிலவி வரும் மருந்து தட்டுப்பாட்டைபோக்க, அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
அதிர்ச்சித் தகவல்
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் பல்வேறு நோய்களுக்கான மருந்துகள் இல்லை என்பதால், இல்லாத மருந்துகளை வெளியில் வாங்கிக் கொள்ளும்படி நோயாளிகளுக்கு பரிந்துரைக்க வேண்டும் என்று ஜிப்மர் மருத்துவர்களுக்கு, மருத்துவமனை நிர்வாகம் அறிவுறுத்தியிருக்கும் தகவல் அதிர்ச்சியளிக்கிறது.
இலவச மருந்து - உறுதி செய்ய வேண்டும்
புதுச்சேரி மட்டுமின்றி தமிழகத்தின் 12 மாவட்டங்களைச் சேர்ந்த மக்களுக்கும் ஜிப்மர் தான் உயிர்காக்கும் மருத்துவமனையாக திகழ்கிறது. அங்கு மருத்துவத்திற்காக வரும் அனைவருக்கும் அனைத்து மருந்துகளும் இலவசமாக வழங்கப்படுவதை ஜிப்மர் நிர்வாகமும், அரசும் உறுதி செய்ய வேண்டும்.
மருந்து தட்டுப்பாடு உறுதியானது
ஜிப்மர் மருத்துவமனையில் கடந்த இரு ஆண்டுகளாகவே மருந்து, மாத்திரைகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தன. மருத்துவர்களுக்கு ஜிம்பர் மருத்துவமனை நிர்வாகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கை மூலம் இந்தக் குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
நிதி ஒதுக்காததால் தட்டுப்பாடு
பா.ம.க.-வின் மருத்துவர் அன்புமணி இராமதாஸ், மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தபோது, ஜிப்மருக்கு தன்னாட்சி அதிகாரம் வழங்கப்பட்டு, அதற்கு தாராளமாக நிதி ஒதுக்கப்பட்டது. இப்போது, நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டிருப்பது தான் மருந்து தட்டுப்பாட்டுக்கு காரணம் ஆகும்.
மத்திய அரசு நடவடிக்கை
புதுவை ஜிப்மரில் நிலவும் மருந்து தட்டுப்பாட்டு லட்சக்கணக்கான ஏழைக் குடும்பங்களை கடுமையாக பாதிக்கும். ஏழைகளுக்கு தரமான மருத்துவம் கிடைப்பதை உறுதி செய்ய ஜிப்மருக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்து, அங்கு நிலவும் மருந்து தட்டுப்பாட்டை போக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.