புயல் பாதித்த புதுக்கோட்டையில் மத்திய குழு ஆய்வு..கதறியடி குறைகளைச் சொன்ன மக்கள்
Recommended Video
புதுக்கோட்டை: கஜா பாதித்த புதுக்கோட்டை மாவட்டத்தில் மத்திய குழு இன்று ஆய்வு மேற்கொண்டது.
கஜா புயலால் தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் கடும் அழிவை சந்தித்துள்ளன. இந்த பேரழிவுகளுக்கு மத்திய அரசிடம் ரூ. 15000 கோடி நிவாரணமாக தமிழக அரசு கோரியுள்ளது.
இதையடுத்து புயல் பாதித்த இடங்களில் ஆய்வு மேற்கொள்ள மத்திய உள்துறை இணைச் செயலாளர் டேனியல் ரிச்சர்ட் தலைமையிலான குழு தமிழகம் வந்துள்ளது. இக்குழுவில் உறுப்பினர்களாக கவுல், வாஸ்தவா, ஹர்ஷா, இளவரசன், மாணிக் சந்திரா, வந்தனா சிங்கால் என மொத்தம் 7 பேர் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் நேற்று இரவு வந்தனர்.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியுடன் இன்று ஆலோசனை மேற்கொண்டனர். இதைத் தொடர்ந்து இன்று மாலை புதுக்கோட்டையில் மத்திய குழுவினர் ஆய்வு செய்யவுள்ளனர்.
மத்திய அரசின் பேரிடர் மேலாண்மை குழுவினர் சென்னையில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் வந்து பின்னர் காரில் புதுக்கோட்டை சென்றனர். புதுக்கோட்டையில் குளத்தூர் பகுதியில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மத்திய குழு ஆய்வு மேற்கொண்டது.
முதலாவதாக புதுக்கோட்டையில் ஆய்வு செய்ய உள்ள மத்திய குழுவினர் கந்தர்வகோட்டை பகுதியில் அருந்ததியர் காலனி, சோழகம்பட்டி, பழைய கந்தர்வகோட்டை, புதுநகர், முதுகுளம், உரியம்பட்டி, நெற்புகை, வீரடிபட்டி உள்ளிட்ட 8 இடங்களை பார்வையிட்டு ஆய்வு அங்குள்ள மக்களிடமும் குறைகளை கேட்டார்கள்.
ஆய்வுக்கு பின் செய்தியாளரிடம் டேணியல் ரிச்சர்ட் கூறுகையில், தமிழகத்தில் கஜா புயலால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து நவம்பர் 27ம் தேதி மத்திய அரசிடம் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்றார்.
இரவிலும் தொடர்ந்த ஆய்வு
இரவு 7 மணி வரையிலும் ஆய்வு விடாமல் தொடர்ந்தது. தொடர்ந்து பல்வேறு ஊர்களுக்கு மத்திய குழுவினர் சென்று பார்த்து ஆய்வு நடத்துகின்றனர். இருப்பினும் சாலையோரமாகவே அவர்கள் போய் வருவதாக ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஒவ்வொரு இடத்திலும் குறைந்தது அரை மணி நேரம் வரை ஆய்வுக் குழுவினர் செலவிட்டனர். அவர்களுடன் அமைச்சர் விஜயபாஸ்கர், லோக்சபா துணைத் தலைவர் தம்பிதுரை ஆகியோர் உடன் உள்ளனர். பொதுமக்கள் பெரிய அளவில் இவர்களை நெருங்க விடவில்லை. இதனால் சில இடங்களில் மக்கள் சத்தம் போட்டதைக் காண முடிந்தது.
மத்திய குழுவினர் மேலோட்டமாகவே பார்வையிட்டு வருவதாகவும், பல முக்கிய இடங்களுக்கு அவர்கள் செல்லவில்லை என்றும் புகார்கள் எழுந்துள்ளன.
நாளை பிற மாவட்டங்கள்:
புதுக்கோட்டையில் முதற்கட்ட ஆய்வை இன்று தொடங்கிய மத்திய குழு, தஞ்சை மாவட்டத்தில் நாளை புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை ஆய்வு செய்கிறது. நாளை மறுநாள் அதாவது திங்கள்கிழமை திருவாரூர் மற்றும் நாகையில் ஆய்வு மேற்கொள்கின்றனர். அன்றைய தினம் மாலை நாகையிலிருந்து காரைக்காலுக்கு சென்று காரைக்காலிலும் ஆய்வு செய்கின்றனர்.