இபிஎஸ்க்கு சிக்கல்? சொத்து விவரங்களை மறைத்ததாக எழுந்த புகார்.. சாட்சியாக ஓபிஎஸ் சேர்ப்பு
சென்னை: தேர்தல் பிரமாண பத்திரத்தில் சொத்து விவரங்களை மறைத்ததாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது தொடரப்பட்ட வழக்கில் விசாரணை அறிக்கையை சேலம் நீதிமன்றத்தில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் நேற்று தாக்கல் செய்து இருந்த நிலையில், ஓபிஎஸ் இந்த வழக்கில் சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ளார்.
தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராகவும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது தாக்கல் செய்த வேட்பு மனுவில் தவறான தகவலை அளித்ததாக புகார் எழுந்துள்ளது. அதாவது, தேனியை அடுத்த பழனிசெட்டிபட்டி பகுதியை சேர்ந்த மிலானி என்பவர் கடந்த மாதம் சேலம் முதலாவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டுக்கு ஆன்லைன் மூலம் புகார் மனு ஒன்றை அளித்தார்.

அதில், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த 2021 அம் ஆண்டு சட்டசபை தேர்தலில் எடப்பாடி தொகுதியில் போட்டியிட்டார். இந்த தொகுதியில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்த எடப்பாடி பழனிசாமி பிரமாண பத்திரத்தில், சொத்து விவரம் பற்றிய தவறான தகவல்கள் அளித்து உள்ளார். எனவே இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இது தொடர்பாக சேலம் மத்திய குற்றப்பிரிவு காவல்துறை விசாரணை நடத்தி உண்மை இருந்தால் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கலாம் என்று தெரிவித்த நீதிமன்றம் விசாரணை அறிக்கையை மே மாதம் 26-ந் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என்று மாஜிஸ்திரேட்டு கலைவாணி குற்றப்பிரிவு காவல்துறைக்கு உத்தரவிட்டு இருந்தார். இது தொடர்பாக சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர்.
கடந்த ஒரு மாதமாக குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். குறிப்பாக எடப்பாடி பழனிசாமி வங்கி கணக்கு, அசையும் சொத்துக்கள், அசையா சொத்துக்கள், படிப்பு போன்றவை குறித்து விரிவாக விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில் விசாரணை அறிக்கையை நேற்று சேலம் முதலாவது மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் குற்றப்பிரிவு போலீசார் தாக்கல் செய்தனர்.
அறிக்கையில் சொத்து விவரம் எவ்வாறு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது என்று போலீசாரிடம் கேட்டபோது பதில் அளிக்க மறுத்து விட்டார்கள். எனினும் எடப்பாடி பழனிசாமி தனது பிரமாண பத்திரத்தில் சொத்து விவரங்களை தவறாக தாக்கல் செய்துள்ளதாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் தாக்கல் செய்துள்ள விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் எடப்பாடி பழனிசாமிக்கு சிக்கல் ஏற்படலாம் எனவும் கூறப்படும் நிலையில், இந்த வழக்கில் சாட்சியாக முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம் சேர்க்கப்பட்டுள்ளார். எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த வேட்பு மனுவில் அப்போது அதிமுக ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓபன்னீர் செல்வம் கையழுத்திட்டதால் வழக்கில் சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ளார்.
புகார்தாரரான மிலானி கொடுத்த மனுவில் ஓ பன்னீர் செல்வம் சாட்சியாக சேர்த்து விசாரிக்க வேண்டும் என்று கூறியதன் அடிப்படையில் இந்த வழக்கில் ஓ பன்னீர் செல்வத்தை சாட்சியாக காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கையில் சேர்த்துள்ளனர்.












Click it and Unblock the Notifications