மதுரை எய்ம்ஸ் குறித்து திமுக எம்பி கதிர் ஆனந்த் எழுப்பிய சரமாரி கேள்வி.. மத்திய அரசு தந்த விளக்கம்
சென்னை: இந்தியாவின் மற்ற மாநிலங்களில் அறிவிக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனைகள் கட்டி முடிக்கப்பட்ட நிலையில், தமிழ்நாட்டில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டும் பணியில் காலதாமதம் ஏன்? என்பது குறித்து திமுக எம்பி கதிர் ஆனந்த் மக்களவையில் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு மத்திய அரசு தரப்பிலிருந்து பதில் கிடைத்திருக்கிறது.
கடந்த 2019ம் ஆண்டு ஜனவரி மாதம் 27ம் தேதி மதுரை மாவட்டம் தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான அடிக்கல்லை பிரதமர் நரேந்திர மோடி நாட்டினார். 4 ஆண்டுகளுக்குள் எய்ம்ஸ் கட்டி முடிக்கப்படம் என்பதே அப்போதைய வாக்குறுதி. ஆனால், கட்டுமானப் பணிக்கு ஜப்பானின் ஜெய்கா நிறுவனத்துடன் 2021ம் ஆண்டுதான் ஒப்பந்தமே கையெழுத்தானது. இப்படியாக அடிக்கல் நாட்டி 5 வருடங்கள் ஆகிவிட்ட நிலையில் எய்ம்ஸ் எப்போது தமிழகத்திற்கு வரும் என்கிற கேள்வியை அனைத்து அரசியல் கட்சியினரும் எழுப்பியுள்ளனர்.

இதற்கிடையில் சமீபத்தில் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், "நாடு முழுவதும் கடந்த 10 ஆண்டுகளில் 15 எய்ம்ஸ் மருத்துவமனைகள் கட்டப்பட்டிருக்கிறது" என்று கூறியிருந்தார். இப்படி இருக்கையில், தமிழ்நாட்டில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டும் பணியில் காலதாமதம் ஏன்? கட்டுமானப் பணியை விரைவுபடுத்த ஒன்றிய அரசு நடவடிக்கை எடுத்துள்ளதா? என்று நாடாளுமன்ற மக்களவையில் வேலூர் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் கேள்வி எழுப்பியிருந்தார். அதாவது
"தமிழ்நாட்டில் மதுரை எய்ம்ஸ் அமைக்கும் பணியை விரைவுபடுத்த மத்திய அரசு ஏதேனும் நடவடிக்கை எடுத்துள்ளதா? அப்படியானால், அதன் விவரங்கள் மற்றும் அதிகப்படியான கால தாமதத்திற்கான காரணங்கள் யாவை? ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் (JICA) வழங்கிய நிதியின் விவரங்கள் மற்றும் JICA விலிருந்து நிதி பெறுவதில் கால தாமதத்திற்கான காரணங்கள் யாவை? மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கு இதுவரை செலவழிக்கப்பட்ட நிதியின் விவரங்கள் மற்றும் மதுரை எய்ம்ஸ் கட்டப்படும் நேரம்; மற்றும் நாட்டில் பல்வேறு இடங்களில் எய்ம்ஸ் அமைப்பதற்கு அரசு நிதி ஒதுக்கியுள்ளதா?
அப்படியானால், நாட்டின் பல்வேறு இடங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கு இதுவரை ஒதுக்கப்பட்ட / செலவிடப்பட்ட நிதி விவரங்கள், இடம் வாரியாக தெரிவிக்கவும்?" என்று விரிவாக கேள்வியெழுப்பியிருந்தார்
இதற்கு மத்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தில் ராஜாங்க அமைச்சர் டாக்டர் பாரதி பிரவின் பவார் எழுத்து பூர்வமாக பதிலளித்துள்ளார். அதில்,
"தமிழ்நாட்டில் மதுரையில் எய்ம்ஸ் அமைப்பதற்கு, எல்லைச் சுவர் கட்டுவது உள்ளிட்ட முதலீட்டுக்கு முந்தைய நடவடிக்கைகள் முடிக்கப்பட்டுள்ளன. திட்ட மேலாண்மை ஆலோசகர் (PMC) நியமிக்கப்பட்டுள்ளார். மாஸ்டர் பிளான் இறுதி செய்யப்பட்டுள்ளது. முக்கிய சிவில் பணிக்கான தொழில்நுட்ப மற்றும் நிதி ஏலம் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. மார்ச் 26, 2021 அன்று ஜப்பான் அரசுக்கும் இந்திய அரசுக்கும் இடையே கையெழுத்தான ஒப்பந்தத்தின்படி, கடன் தொகை ஜப்பானிய யென் 22,788,000,000 மட்டுமே.
மதுரை எய்ம்ஸ் கட்டி முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்ட தேதி அக்டோபர், 2026 ஆகும். இந்திய அரசு திட்டத்தின் முன் முதலீட்டு நடவடிக்கைகளுக்காக ரூ.12.35 கோடி மற்றும் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் திட்ட மேலாண்மை ஆலோசனைக்கு ரூ.6 கோடி இதுவரை வழங்கப்பட்டுள்ளது" என்று கூறி, நாட்டின் பல்வேறு இடங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கு இதுவரை ஒதுக்கப்பட்ட / செலவிடப்பட்ட நிதி விவரங்களையும் பகிர்ந்திருக்கிறது.












Click it and Unblock the Notifications