ராகுல் காந்தியும் ஸ்டாலினும் ஒரே மேடையில் பிரச்சாரம் செய்வார்களா? ஆர்.எஸ்.பாரதி விளக்கம்
சென்னை: ராகுல் காந்தியும், ஸ்டாலினும் ஒரே மேடையில் பிரச்சாரம் செய்வார்களா என்ற கேள்விக்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி விளக்கம் அளித்துள்ளார். ராகுல் காந்தி 2 நாட்கள் மட்டுமே பிரச்சாரத்திற்கு வருவதால், ஸ்டாலினின் பிரச்சாரத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 5 நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், இதுவரை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி தமிழ்நாட்டிற்கு வரவில்லை. நாளை மற்றும் ஏப்ரல் 20 ஆகிய இரு நாட்களில் தமிழ்நாட்டில் ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் முதல்வர் ஸ்டாலினுடன் இணைந்து ஒரே மேடையில் ராகுல் காந்தி பிரச்சாரம் செய்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த நிலையில் சென்னையில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், அதிமுகவினர் ரூ.10 ஆயிரம் செக் போன்று நோட்டீஸ் கொடுத்து பிரச்சாரம் செய்கின்றனர். இதுதொடர்பாக புகார் அளித்துள்ளோம். அவர் மீது எந்த நடவடிக்கையும் இல்லை.
ஜோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு பாஜக ஆதரவாளர்கள் பெயருக்கும் பணம் அனுப்பி வருகிறார். நேற்று மட்டும் ரூ.70 லட்சம் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. இதனால் ஸ்ரீதர் வேம்பு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்படி அவர் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
தொடர்ந்து, ராகுல் காந்தியும், ஸ்டாலினும் ஒரே மேடையில் பிரச்சாரம் செய்ய வாய்ப்பு இல்லை. தேர்தல் பிரச்சாரம் தொடர்பாக ஏற்கனவே ஏராளமான திட்டங்கள் போடப்பட்டுவிட்டது. ஏப்ரல் 20 முதல் ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் பிரச்சாரம் செய்ய வேண்டியுள்ளது. இன்னும் 30 முதல் 40 தொகுதிகளில் பிரச்சாரம் செய்ய வேண்டி இருக்கிறது.
ராகுல் காந்தி - ஸ்டாலின் இடையில் மோதல் என்று அண்ணாமலை பேசியது பொய்யாகிவிட்டது. நாளை ராகுல் காந்தி தமிழ்நாட்டில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். அவர் திமுகவுக்கும் சேர்த்தே பிரச்சாரம் செய்ய உள்ளார். நாங்களும் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கும் சேர்த்துதான் பணியாற்றி வருகிறோம் என்று தெரிவித்துள்ளார்.
லோக்சபா தேர்தலின் போது ராகுல் காந்தி தமிழ்நாடு வந்த போது, முதல்வர் ஸ்டாலினுக்கு ஸ்வீட் வாங்கி வந்தது பேசுபொருளாகியது. ஆனால் இம்முறை புதுச்சேரி தேர்தல் பிரச்சாரத்தின் போதும் முதல்வர் ஸ்டாலினை ராகுல் காந்தி சந்திக்கவில்லை. தமிழ்நாடு தேர்தல் பிரச்சாரத்தின் போதும் ராகுல் காந்தி - ஸ்டாலின் சந்திப்பு நடக்காமல் இருப்பது விவாதமாகி இருக்கிறது.












Click it and Unblock the Notifications