"ஒருங்கிணைந்த அதிமுக" ஓபிஎஸ், டிடிவி தினகரனை கைவிட்டதா பாஜக? இப்படி நடக்கவும் சான்ஸ் இருக்கு!
சென்னை: 2026 சட்டசபைத் தேர்தலில் ஒருங்கிணைந்த அதிமுக உருவாக வாய்ப்புகள் உள்ளதாக பார்க்கப்படுகிறது. அதிமுக - பாஜக கூட்டணி உறுதியாகி இருக்கும் நிலையில், ஒருங்கிணைந்த அதிமுகவுக்காக எடப்பாடி பழனிசாமியுடன் பாஜக நிர்வாகிகள் தரப்பில் ஆலோசிக்கப்படும் என்று கருதப்படுகிறது. அதேபோல் பாஜக தரப்பில் உள் ஒதுக்கீடாக ஓபிஎஸ் மற்றும் அமமுக கட்சிகளுக்கு கூட்டணியில் தொகுதிகள் ஒதுக்கவும் வாய்ப்பு இருப்பதாக பார்க்கப்படுகிறது.
2024 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக உடனான கூட்டணியில் இருந்து பாஜக விலகிய பின், தனியாக ஒரு கூட்டணியை அமைத்தது. பாஜக, பாமக, அமமுக, ஓபிஎஸ், தமாகா என்று ஏராளமான கட்சிகளை இணைத்து 3வது அணியை உருவாக்கியது. இதன் காரணமாக பல்வேறு தொகுதிகளில் அதிமுக வேட்பாளர்களின் வெற்றியை பாஜக கூட்டணி தடுத்தது என்று சொல்லலாம்.

அதிமுக - பாஜக கூட்டணி
இந்த நிலையில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு மீண்டும் அதிமுக - பாஜக கூட்டணி அமைந்துள்ளது. இந்த கூட்டணியில் இன்னும் சில கட்சிகள் இணையக் கூடும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். இதனால் தமாகா, பாமக உள்ளிட்ட கட்சிகள் இணைய வாய்ப்பு இருப்பதாக பார்க்கப்படுகிறது.
அமித் ஷா ஷாக்
ஆனால் ஓபிஎஸ், அமமுக உள்ளிட்ட கட்சிகள் பற்றிய கேள்விக்கு அமித் ஷா, அதிமுக உட்கட்சி பிரச்சனையில் நாங்கள் தலையிடப் போவதில்லை என்று கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பாஜகவுடன் பயணித்து வந்த அமமுக மற்றும் ஓபிஎஸ் ஆகியோரை பாஜக கூட்டணி கைவிட்டதாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.
ஒருங்கிணைந்த அதிமுக
ஆனால் ஒருங்கிணைந்த அதிமுக இல்லாமல் திமுக கூட்டணியை வீழ்த்துவது எளிதாக இருக்காது. இதனை பாஜக நன்றாக அறிந்தே இருக்கும். ஆனால் எடப்பாடி பழனிசாமியின் பிடிவாதம் காரணமாக பாஜக அமைதி காப்பதாக கூறப்படுகிறது. ஆனாலும் தேர்தல் நெருங்கும் போது ஒருங்கிணைந்த அதிமுக அமைவதற்கான சூழல் உருவாகும் என்று அரசியல் விமர்சகர்கள் தரப்பில் கூறப்பட்டு வருகிறது.
தென் மாவட்டங்கள்
ஏனென்றால் தென் மாவட்டங்களில் அதிமுகவுக்கு கட்டமைப்பு இருந்தாலும், எடப்பாடி பழனிசாமிக்கு பெரியளவில் ஆதரவு இல்லை. முக்குலத்தோர் சமூக வாக்குகளை அறுவடை செய்ய வேண்டுமென்றால், அதற்கு ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் ஆதரவு கட்டாயம் தேவை. கடந்த நாடாளுமன்றத் தேர்தலிலேயே அதிமுக தென் மாவட்டங்களில் மோசமான தோல்வியை பெற்றது.
பாஜகவின் திட்டம்
இதனால் சட்டசபை தேர்தல் நெருங்கும் போது பாஜகவுக்கு கூடுதல் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, பாஜக தரப்பில் உள் ஒதுக்கீடாக ஓபிஎஸ் மற்றும் அமமுக கட்சிகளுக்கு கூட்டணியில் இடம் கிடைக்கும் என்று கூறி வருகின்றனர். ஆனால் ஓபிஎஸ்-க்கு இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட எடப்பாடி பழனிசாமி அனுமதி கொடுப்பாரா என்பது மட்டுமே சந்தேகம் என்று பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications