கண்ணே தெரியல.. கொட்டுகிறது பனி.. இங்கெல்லாம் இன்று மழை பெய்ய போகிறது.. வந்தது அறிக்கை
கடலோர மாவட்டங்களுக்கு இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது
சென்னை: வடகிழக்கு பருவக் காற்று காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் அடுத்து 5 நாட்களுக்கு மழை பெய்யும் என்று வானிலை மையம் ஏற்கனவே தெரிவித்திருந்த நிலையில், கடலோர மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் தொடங்கியது... இதனால், வழக்கமாக பெய்ய வேண்டிய 17 செ.மீ. என்ற இயல்பான அளவை விட 29 சதவீதம் அதிகரித்து, 22 செ.மீ. என்ற அளவில் மழை பதிவானது.
ஆனால், நவம்பரில் பருவமழை கொட்டி தீர்த்துவிட்டது.. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அதி மற்றும் மிக கன மழை கொட்டியது... இதனால், அந்த மாதத்தில் பெய்ய வேண்டிய 17 செ.மீ. மழை என்ற அளவை விட 137 சதவீதம் அதிகமாக 42 செ.மீ. மழை பதிவாகியது. இதன் காரணமாக பெரும்பாலான ஆறுகள், ஏரிகள், அணைகள், குளங்கள் நிரம்பின. எனவே, இந்த மாதத்திலும் மழை இருக்கும் என்று கூறப்பட்ட நிலையில், மழை குறைவாகவே இருந்து வருகிறது... ஆனால், பெரும்பாலான மாவட்டங்களில் பனியின் தாக்கம் அதிகரித்து விட்டது.. எங்கு பார்த்தாலும் பனிமூட்டம் காணப்படுகிறது..

புதுச்சேரி
இதனால், மழைப்பொழிவு வெகுவாக குறைந்து வருகிறது.. சில மாவட்டங்களில் பனிமூட்டம் காரணமாக, வாகன ஓட்டிகள் வாகனங்களை ஓட்ட சிரமப்படுகின்றனர்.. அதேநேரம் வடகிழக்கு பருவகாற்றின் காரணமாக இன்றும், நாளையும் கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் சில இடங்களில் மிதமான மழையும், உள் மாவட்டங்களில் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

சென்னை
வரும் 15, மற்றும் 16-ந் தேதியும் தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், வட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்ய வாய்ப்பு இருக்கிறது. சென்னையை பொறுத்தவரையில் இன்று வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் சில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிதமான மழை
கடந்த 2 நாட்களுக்கு முன்பு வானிலை மையம் வெளியிட்டிருந்த அறிக்கையில், டிசம்பர் 13ம் தேதி தமிழ்நாட்டில் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் மிதமான மழையும், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்று தெரிவித்திருந்தது..

மழைக்கு வாய்ப்பு
நாளைய தினம் அதாவது டிசம்பர் 14ம் தேதி தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும், டிசம்பர் 15ம் தேதி தென் மாவட்டங்கள், வட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும், அதே சமயம் ஏனைய மாவட்டங்களில் பொதுவாக வறண்ட வானிலையும், ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யவும் வாய்ப்பு இருக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications