தென் மாவட்ட மக்களுக்கு குட் நியூஸ்.. இங்கெல்லாம் இன்று மழை வர போகுது.. வானிலை ஆய்வு மையம்
தென் தமிழகத்துக்கு இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது
சென்னை: தென் தமிழகம் மற்றும் இலங்கையை ஒட்டி நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென் மாவட்டங்களில் சில இடங்களில் இன்று மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்துக்கு வரும் 9-ம்தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் ஏற்கனவே தெரிவித்திருந்தது.. அதேபோல, 2 நாளைக்கு முன்பு வானிலை மையம் மேலும் ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தது..
அதில், தென் மாவட்டங்கள் மற்றும் இலங்கையை ஒட்டி, வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக,தென் மாவட்டங்களில் இன்று மிதமான மழை பெய்யும், மற்ற மாவட்டங்களில் வறண்ட வானிலையே நிலவும் என்றும் கூறப்பட்டிருந்தது.

மழை
அதேபோல, நாளை (8-ம்தேதி) கடலூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களிலும், புதுச்சேரி, காரைக்காலிலும் கன மழை பெய்யும். மற்ற மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும். வரும் 9ம் தேதி அரியலுார், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, துாத்துக்குடி மாவட்டங்களில் கன மழை பெய்யும். கடலோர மாவட்டங்கள் மற்றும் அதையொட்டிய மாவட்டங்களில், சில இடங்களில் மிதமான மழை பெய்யும்.

வறண்ட வானிலை
சென்னையில் இன்று சில இடங்களில் வானம் மேக மூட்டமாக காணப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்த நிலையில், நேற்று முழுவதும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலான மழை பெய்துள்ளது.. வங்கக் கடலில் நிலவிய ஜாவத் புயல் கொல்கத்தா அருகே நேற்று முன்தினம் கரையை கடந்து சென்றதால், இப்போதும் வறண்ட வானிலையே நிலவுவதாக கூறப்படுகிறது.. எனவே, தென் தமிழ்நாடு மற்றும் இலங்கையை ஒட்டிய பகுதியில் மேலடுக்கு சுழற்சி நீடித்து வருகிறது... இந்த வளி மண்டல மேல் அடுக்கு சுழற்சியால் இன்றும் தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

டெல்டா
இதுதவிர கடலூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, டெல்டா மாவட்டங்கள், மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கனமழை பெய்யும் என்றும் சென்னையில் நேற்று சில இடங்களில் லேசான மழை பெய்த நிலையில், இன்றும் பொதுவாக மேகமூட்டம் காணப்படும். நகரின் சில இடங்களில் லேசான மழைபெய்யும் வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது...

ஆயக்குடி
இதனிடையே நேற்றெல்லாம் பெய்த மழை காரணமாக, தென்மாவட்டங்களில் நீர்நிலைகள் நிறைந்து வருகின்றன.. ஆயக்குடி பகுதியில் கனமழை கொட்டியது... இதன் காரணமாக முக்கிய சாலைகளில் ஆற்றுவெள்ளம் போல் தண்ணீர் பெருக்கெடுத்து அங்கு ஓடியது... மழை காரணமாக குற்றால அருவிகளில் இன்று கூடுதலாக தண்ணீர் விழுந்து கொண்டிருக்கிறது.. சிற்றாற்றிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

சாரல் மழை
நெல்லை மாவட்டத்தில் அதிகபட்சமாக மூலக்கரைப்பட்டி பகுதியில் 40 மில்லி மீட்டர் அளவுக்கு மழை பெய்துள்ளது... பாபநாசம், சேர்வலாறு, நம்பியாறு, சேரன்மகாதேவி பகுதியில் சாரல்மழை பெய்துள்ளது.. ஆனால், தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று எதிர்பார்த்த அளவுக்கு மழை பெய்யவில்லை. ஆனால், ஒரு சில இடங்களில் சாரல் காற்று வீசியது.

தாமிரபரணி
நெல்லை, தென்காசி மாவட்டத்தின் மிகப்பெரிய அணையான மணிமுத்தாறு அணை இந்த ஆண்டில் இதுவரை நிரம்பாமலேயே உள்ளது.. இப்போது வடகிழக்கு பருவமழை வழக்கத்தைவிட அதிக அளவு பெய்து வருவதால் மணிமுத்தாறு அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது.. அதேபோல, தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் கூடுதலாக செல்வதாலும் ஏராளமான தண்ணீர் கடலில் கலப்பதாலும், மணிமுத்தாறு அணையில் இருந்து தாமிரபரணி ஆற்றிற்கு தண்ணீர் திறக்கப்படவில்லை. எனினும், நெல்லை பகுதியில் மழை குறைந்துள்ளது.












Click it and Unblock the Notifications