சந்திரயான் 3: இந்தியாவுக்கே பெருமை சேர்க்கும் விண்கலம்.. மூளையாக செயல்பட்ட தமிழர் வீரமுத்துவேல்!
சென்னை: நிலவுக்கு இஸ்ரோவால் அனுப்பப்படும் சந்திரயான் 3 திட்டத்தில் மூளையாக செயல்படுபவர் ஒரு தமிழர். அவர் விழுப்புரத்தை சேர்ந்தவர் தெரியுமா?
நிலவின் தென்துருவத்தில் ஆய்வு செய்வதற்காக சந்திரயான் 2 என்ற விண்கலத்தை கடந்த 2019 ஆம் ஆண்டு விண்ணில் செலுத்தியது. இது சுற்றுப்பாதையை சென்றடைந்த போதிலும் தொழில்நுட்ப கோளாறால் திட்டமிட்டபடி லேண்டர் கருவி தரையிறங்காமல் நிலவிலேயே மோதி செயலிழந்தது. இதன் பாகங்களை 2 மாதங்களாக இஸ்ரோவும் நாசாவும் தேடி வந்தன. ஆனால் சென்னையை சேர்ந்த சண்முக சுப்பிரமணியன் அதே ஆண்டு டிசம்பர் 3 ஆம் தேதி தனது தொலைநோக்கி மூலம் ரோவரின் பாகங்களை கண்டறிந்தார்.

சந்திரயான் 2 திட்டம் தோல்வியில் முடிந்த நிலையில் ரூ.615 கோடியில் சந்திரயான் 3 விண்கலத்தை இஸ்ரோ (இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம்) வடிவமைத்துள்ளது. இந்த விண்கலம் எல்விஎம் 3 எம் 4 ராக்கெட் மூலம் ஸ்ரீ ஹரிகோட்டாவில் உள்ள 2ஆம் ஏவுதளத்தில் இருந்து நாளை மதியம் 2.35 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது.
இதற்கான 26 மணி நேர கவுன்ட்டவுன் இன்று பகல் 1 மணிக்கு தொடங்குகிறது. சந்திரயான் 3 மூலமாக நிலவின் மேற்பரப்பில் விண்கலத்தை தரையிறக்கும் 4ஆவது நாடு என்ற பெருமையை இந்தியா பெறும் என மத்திய விண்வெளித்துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.
இந்த சந்திரயான் 3 திட்டம் குறித்து இந்தியாவே எதிர்பார்த்து வரும் நிலையில் இந்த திட்டத்திற்கு மூளையாக செயல்பட்டவர் குறித்து பெரும்பாலானோருக்கு தெரியாது. அதிலும் அவர் தமிழகத்தை சேர்ந்தவர். அவர் யார் என்பது குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன.
இஸ்ரோ விஞ்ஞானியான வீரமுத்துவேல் என்பவர்தான் சந்திரயான் 3 மிஷனின் பின்னணியில் இருக்கிறார். விழுப்புரத்தை சேர்ந்தவர். இவர் சென்னை ஐஐடியில் படித்தவர். இவர் சந்திரயான் 2 திட்டத்திலும் முக்கிய பங்காற்றியுள்ளார். சந்திரயான் 2 திட்டத்தின் இயக்குநராக இருந்தவர் வனிதா. இவருக்கு பதிலாகத்தான் வீரமுத்துவேல் இந்த சந்திரயான் 3 திட்டத்திற்கு திட்ட இயக்குநராக செயல்பட்டு வருகிறார்.
வீரமுத்துவேலின் தந்தை பழனிவேல். இவர் தென்னக ரயில்வேயில் டெக்னீசியனாக பணியாற்றியவர். இவர்கள் விழுப்புரத்தில் உள்ள ரயில்வே குடியிருப்பில் வசித்து வந்தனர். வீரமுத்துவேல் விழுப்புரத்தில் உள்ள ரயில்வே பள்ளியில் படித்தார். பிறகு தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் மெக்கானிக்கல் என்ஜீனியரிங்கில் டிப்ளமோ படித்துள்ளார். இதைத் தொடர்ந்து சென்னையில் தனியார் கல்லூரியில் பொறியியல் படிப்பை முடித்தார். சென்னை ஐஐடியில் ஆராய்ச்சி பட்டம் பெற்றார்.
அவருக்கு மத்திய அரசு துறைகளில் நிறைய வேலைகள் கிடைத்தன. ஆனாலும் அவர் அந்த பணிகளில் சேரவில்லை. கடந்த 2014 ஆம் ஆண்டு இஸ்ரோவில் விஞ்ஞானியாக சேர்ந்தார் வீரமுத்துவேல். இவர் இஸ்ரோ தலைமையகத்தில் விண்வெளி உள்கட்டமைப்பு அலுவலகத்தின் துணை இயக்குநராகவும் இருந்தார். கடந்த 2019ஆம் ஆண்டு சந்தியரான் 3 திட்ட இயக்குநராக வீரமுத்துவேல் நியமிக்கப்பட்டார்.
வீரமுத்துவேலின் சிறுவயது கனவு என்பது இஸ்ரோவில் விஞ்ஞானியாக வேண்டும் என்பதுதானாம். இவர் நியமிக்கப்பட்ட போது ஏற்கெனவே அந்த திட்டத்தின் இயக்குநராக இருந்த வனிதா மாற்றப்பட்டது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியும் அவர் எந்த பதிலையும் சொல்லவில்லை.












Click it and Unblock the Notifications