தலைமை செயலாளர் மாற்றம்.. தன்னுடைய இடமாற்றத்திற்கு தானே கையெழுத்திட்ட ராஜிவ் ரஞ்சன்
சென்னை: தமிழகத்தின் புதிய முதல்வராக ஸ்டாலின் இன்று பதவியேற்ற நிலையில் தமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளராக வெ.இறையன்பு நியமனம் செய்யப்பட்டுள்ளார். தலைமை செயலாளராக இருந்த ராஜிவ் ரஞ்சன், தமிழ்நாடு செய்தித்தாள் கழகத்துக்கு மாற்றப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவில் கையெழுத்திட்டதும் ராஜிவ் ரஞ்சன் தான்.
புரோட்டோகால் படி ஐஏஎஸ் அதிகாரிகளை தலைமை செயலாளர் தான் மாற்ற முடியும் என்பதால் ராஜிவ் ரஞ்சன், புதிய தலைமை செயலாளருக்கான உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார்.
திமுக கூட்டணி தமிழக சட்டசபை தேர்தலில் மிகப்பெரிய வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்துள்ளது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்டார். ஸ்டாலின் தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்ற இன்றே தமிழகத்தின் தலைமை செயலாளர், முதல்வரின் தனிசெயலாளர்கள் உள்ளிட்டோர் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்கள்..

தலைமை செயலாளர்
முதல்வர் ஸ்டாலினின் முதன்மைச் செயலாளராக உதயசந்திரன் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல் உமாநாத், எம்.எஸ்.ஷண்முகம், அனு ஜார்ஜ் ஆகியோரும் முதல்வரின் முதன்மை செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழக அரசின் தலைமைச் செயலாளராக ஐஏஎஸ் அதிகாரி வெ.இறையன்பு நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்.

செய்திதாள் நிறுவனம்
தமிழக தலைமைச் செயலாளராக இருந்த ராஜிவ் ரஞ்சன் தமிழ்நாடு செய்தித்தாள் கழகத்துக்கு மாற்றபட்டுள்ளார் இதற்கான உத்தரவில் புரோட்டோகால் படி ராஜிவ் ரஞ்சனே கையெழுத்திட்டுள்ளார். அவர் பெயரில் தான் ஆர்டர் வந்துள்ளது.

வகித்த பொறுப்புகள்
தலைமை செயலாளராக மாறி உள்ள இறையன்பு ஐஏஏஸ், உதவி ஆட்சியர், நாகப்பட்டினம், இணை ஆணையர், நகராட்சி நிர்வாகம், கூடுதல் ஆட்சியர், கடலூர் மாவட்டம்,, தனி அலுவலர், எட்டாவது உலகத் தமிழ் மாநாடு, இயக்குநர், செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறை, மாவட்ட ஆட்சியர், காஞ்சிபுரம், கூடுதல் செயலர், முதலமைச்சரின் செயலகம், செயலர், செய்தி மற்றும் சுற்றுலாத் துறை, செயலர், சுற்றுலா மற்றும் பண்பாட்டுத் துறை, தலைமை இயக்குநர் (பயிற்சி) மற்றும் இயக்குநர், அண்ணா மேலாண்மை நிலையம் உள்ளிட்ட பொறுப்புகளை வகித்துள்ளார்.

செப்டம்பரில் ஓய்வு
முன்னதாக தமிழக அரசின் தலைமைச் செயலாளராக இருந்த க.சண்முகம் கடந்த ஜனவரி 31ம் ததி ஓய்வுப்பெறுவதை ஒட்டி 47-வது தலைமைச் செயலராக ராஜிவ் ரஞ்சன் புதிய தலைமைச் செயலராக நியமிக்கப்பட்டார். கடந்த 4 மாதங்களாக தலைமை செயலாளராக இருந்து வந்த ராஜிவ் ரஞ்சன் இப்போது தமிழ்நாடு செய்திதாள் நிறுவனத்தின் இயக்குனராக மாற்றப்பட்டுள்ளார். இவர் கடந்த ஜனவரி மாதம் தான் மத்திய அரசு பணியில் இருந்து தமிழக பணிக்கு மாற்றப்பட்டார். 1985-ம் ஆண்டு தமிழக ஐஏஎஸ் கேடராக துணை ஆட்சியராக பணியைத்தொடங்கிய ராஜிவ் ரஞ்சன் படிப்படியாக பல முக்கிய பதவிகளை வகித்தார். 2001 முதல் 2007 வரை 7 ஆண்டுகள் அயல்பணியாக மத்திய அரசுப்பணியில் பணியாற்றினார். 2007-ல் இணைச் செயலாளர் அந்தஸ்த்துக்கு உயர்வு பெற்றார். 2009 முதல் முதன்மைச் செயலராக பல்வேறு துறைகளில் பணியாற்றியுள்ளார். மத்திய அரசின் அயல் பணியில் 11 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றிய அனுபவம் பெற்றவ்ர். ஜிஎஸ்டி கவுன்சில் சிறப்புச் செயலராக 2019 அக்டோபர் முதல் செயல்பட்டார்.. ராஜிவ் ரஞ்சன் இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ஓய்வு பெறுகிறார்.












Click it and Unblock the Notifications