செம்பரம்பாக்கத்துக்கு நற்செய்தி.. சோழவரம் தந்த ஸ்வீட் நியூஸ்.. பூரித்து போன சென்னை.. என்னனு பாருங்க
சென்னை: தமிழகம் முழுக்க பரவலாக மழை பெய்து வரும்நிலையில், சென்னைவாசிகளின் குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு கிடைத்துள்ளது.. இதுகுறித்து அதிகாரிகள் ஒரு நல்ல செய்தியை சொல்லி உள்ளார்கள்.
வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது.. அதன்படியே, கடந்த 2 நாட்களாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இரவு மற்றும் காலை நேரங்களில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.

குறிப்பாக, டெல்டா மாவட்டங்களான, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, திருச்சி மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அதற்கேற்றவாறு, மழையும் தமிழகம் முழுக்க கொட்டி வருகிறது..
கொட்டிய மழை: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, தஞ்சாவூர், அரியலூர், திண்டுக்கல், கரூர், சேலம் மற்றும் நாமக்கல் ஆகிய 10 மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி, சேலம், தி.மலை, கடலூர், ராணிப்பேட்டை, பெரம்பலூர், தஞ்சாவூர் போன்ற பிற மாவட்டங்களிலும் மழை பெய்யும் என்று தமிழ்நாடு வெதர்மேனும் ட்வீட் பதிவிட்டிருந்தார்.
நேற்றிரவும் சென்னையில் பல்வேறு இடங்களில் பலத்த மழை கொட்டியது.. எழும்பூர், புரசைவாக்கம், பெரம்பூர், செங்குன்றம், புழல், அயனாவரம், கோயம்பேடு, கோடம்பாக்கம், போரூர், ராயபுரம், தண்டையார்பேட்டை, திருவொற்றியூர், மீனம்பாக்கம், வேளச்சேரி, தாம்பரம், ஆலந்தூர், திருவான்மியூர் உள்ளிட்ட இடங்களில் இரவு தொடங்கிய மழை அதிகாலை வரை நீடித்தது. சில இடங்களில் பலத்த மழையும், சில இடங்களில் சாரல் மழையும் வெளுத்து கட்டியது.
மழை பதிவு: காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்ததால், அதிகபட்சமாக திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டையில் 9 செ.மீட்டர் மழை பதிவாகியிருக்கிறது.
இதனிடையே தொடர் மழை காரணமாக, சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பூண்டி, புழல் செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன் கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரிகள் நிரம்பி வருகின்றன.. செம்பரம்பாக்கம் ஏரியில் தண்ணீர் இருப்பு 72 சதவீதம் உள்ளது.. அதாவது, மொத்த கொள்ளளவு 3645 மி.கனஅடி. இதில் 2,623 மி.கனஅடி நீர் இருப்பு உள்ளது.. இதில், சென்னை குடிநீர் தேவைக்காக 156 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
பூண்டி ஏரி: பூண்டி ஏரியை பொறுத்தவரை, மொத்த கொள்ளளவு 3231மி.கனஅடியாக உள்ள நிலையில், 1803 மி.கன அடி நீர் நிரம்பி உள்ளது.. 70 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.
சோழவரம் ஏரியை பொறுத்தவரை, மொத்த கொள்ளளவான 1081 மி.கனஅடியில், 110 மி.கனஅடி மட்டுமே நீர் உள்ளது.. கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரியில், 344 மி.கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது...
மொத்தத்தில், புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளில், போதுமான அளவு தண்ணீர் இருப்பதால் இப்போதைக்கு சென்னை நகரில் தட்டுப்பாடின்றி குடிநீர் வினியோகம் செய்ய முடியும் என்று அதிகாரிகள் நம்பிக்கையுடன் சொல்கிறார்கள். இந்த தகவலானது சென்னைவாசிகளுக்கு பெருத்த மகிழ்ச்சியை தந்து வருகிறது.












Click it and Unblock the Notifications