நடுங்கிப் போன சென்னை.. தலையை குறி வைத்து வெட்டு.. எதிர் கோஷ்டியால் கொன்று வீசப்பட்ட "A+ கேங் லீடர்"
சென்னை: "A+ கேட்டகிரியைச் சேர்ந்த", சென்னையை சேர்ந்த பிரபல ரவுடி சிவக்குமார் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
சென்னையை சேர்ந்த பிரபல ரவுடி மயிலாப்பூர் சிவா என்ற சிவக்குமார். இவர் மீது கொலை ,கொள்ளை, வழிப்பறி, ஆள் கடத்தல் என 40 க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது.
இவருக்கு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சூர்யா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. குழந்தைகள் இல்லை.

கேங் லீடர்
சமீபத்தில், சென்னை மாநகர காவல்துறை கணக்கெடுத்த ரவுடிகளின் பட்டியலில் A+ கேட்டகிரியில் கேங் லீடர் என்று வரையறுக்கப்பட்ட ரவுடி பட்டியலில் சிவக்குமார் பெயர் இடம் பெற்றிருந்தது. சிவக்குமார் உத்தரமேரூர் அருகே தனது சகோதரி வீட்டில் தலைமறைவாக இருந்து வருவதாக காவல்துறைக்கு வந்த தகவலின் அடிப்படையில் தனிப்படை போலீசார் உத்தரமேரூர் அருகே வைத்து துப்பாக்கி முனையில் கடந்த ஆண்டு செப்டம்பர் 4 ஆம் தேதி சிவக்குமாரை கைது செய்தனர். அவரிடமிருந்து கத்தி, மூன்று செல்போன் மற்றும் பணம் உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்..

ஜாமீனில் வெளியே வந்தார்
இந்நிலையில், சமீபத்தில் ஜாமீனில் வெளியே வந்த சிவக்குமார், அசோக்நகர், போஸ்டல் காலனி, 2 வது தெருவில் , ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் ஒருவரிடம் கொரோனா காலகட்டத்தில் கொடுத்த பத்து லட்சம் கடனை வாங்க சென்றுள்ளார். அப்போது சிவக்குமாரை பின்தொடர்ந்து வந்த மர்மகும்பல் ரியல் எஸ்டேட் அலுவலகத்திற்கு உள்ளேயே வைத்து சரமாரியாக தலைப்பகுதியில் வெட்டி சாய்த்து விட்டு தப்பி ஓடிவிட்டனர்.

படுகொலை
இதில் சிவக்குமார் அதே இடத்தில் ரத்த வெள்ளத்தில் பலியானார். தகவல் அறிந்த அசோக்நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலைக்கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் வெட்டி சாய்த்து விட்டு ஒடிய மர்ம கும்பலை வலை வீசி தேடி வருகின்றனர்.

பழிக்கு பழி
முதற்கட்ட விசாரணையில் முன்விரோதம் காரணமாக பழிக்கு பழி சம்பவமாக இந்த கொலைச் சம்பவம் அரங்கேறியுள்ளதாக தெரியவந்துள்ளது. இதனால் சென்னை, அசோக் நகர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications