செங்கல்பட்டு மாவட்டத்தில் புதிதாக வீடு கட்டுவோருக்கு கலெக்டர் அருண்ராஜ் முக்கிய அறிவிப்பு
சென்னை: ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அனைத்து ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட செங்கல்பட்டு மாவட்டம் கிராம ஊராட்சிகளில் அமைக்கப்படும் மனைப்பிரிவுகள் மற்றும் கட்டப்படும் கட்டிடங்களுக்கு இணையதளம் வாயிலாக முறையான அனுமதி பெறுதல் கட்டாயம் என்று கூறியுள்ள செங்கல்பட்டு கலெக்டர் அருண்ராஜ், கட்டிட அனுமதியை இணையவழியில் விண்ணப்பித்து பெற்றிடுங்கள் என்று புதிதாக வீடு கட்டுவோருக்கு அறிவுறுத்தியுள்ளார்.
செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில் கூறுகையில், "ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அனைத்து ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட செங்கல்பட்டு மாவட்டம் கிராம ஊராட்சிகளில் அமைக்கப்படும் மனைப்பிரிவுகள் மற்றும் கட்டப்படும் கட்டிடங்களுக்கு இணையதளம் வாயிலாக முறையான அனுமதி பெறுதல் கட்டாயமாகும். அவற்றின் மூலம் வசூலிக்கப்படும் கட்டணத்தொகை வருவாய்கள் கிராம ஊராட்சியின் வளர்ச்சி பணிகளுக்கு முக்கிய ஆதாரமாக உள்ளது.

மேற்படி மனைப்பிரிவு மற்றும் கட்டிடங்களுக்கான அனுமதியை பொதுமக்கள் எளிதில் பெறும் வகையில் 2.10.2023 முதல் தமிழ்நாடு அரசின் மூலம் ஒற்றை சாளர முறையிலான இணையதளம் (https://onlineppa.tn.gov.in) கொண்டு வரப்பட்டு இணையதளம் வாயிலாக மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது.
இதன்படி 2,500 சதுர அடி வரையிலான மனைப்பரப்பில் 3,500 சதுர அடி வரையிலான கட்டிட பரப்பில் தரை அல்லது தரை மற்றும் முதல் தளம் கொண்ட குடியிருப்பு கட்டிடம் கட்டுவதற்கு உடனடி பதிவின் மூலம் உரிய கட்டணம் செலுத்தி சுய சான்று முறையில் இணையதளம் வாயிலாக அனுமதி அளிக்கப்படுகிறது.
2,500-10,000 சதுர அடிக்குள் கட்டப்படும் கட்டிடங்களுக்கு இணையதளம் வாயிலாக விண்ணப்பித்து உரிய கட்டணங்கள் செலுத்திய பின்னர் சம்மந்தப்பட்ட கிராம ஊராட்சி மூலம் அனுமதி அளிக்கப்படுகிறது.
மேலும் 10,000 சதுர அடிக்கு மேற்பட்ட கட்டிடங்களுக்கு இணையதளம் வாயிலாக விண்ணப்பம் செய்து உரிய கட்டணங்கள் செலுத்திய பின்னர் நகர கிராம திட்டமிடல் இயக்குநரகம் (DTCP) மற்றும் சம்மந்தப்பட்ட கிராம ஊராட்சி வாயிலாக (Non self certificate) அனுமதி வழங்கப்படுகிறது.
கிராம ஊராட்சிகளில் புதியதாக அமைக்கப்படும் மனைப்பிரிவுகளில் முறையான மின்கம்பங்கள், குடிநீர் வடிகால்கள் ஆகிய அடிப்படை வசதிகள் இருத்தல் மற்றும் திறந்த வெளி நிலங்கள் சம்பந்தப்பட்ட கிராம ஊராட்சியின் பெயரில் பத்திர பதிவு செய்யப்பட்டு இருத்தல் நிறைவேற்றப்பட்டு அளிக்கப்படுகிறது. இருப்பின் இணையதளம் ஆகிய நிபந்தனைகள் வழியாக அனுமதி அளிக்கப்படுகிறது.
இந்த வகையில் மனைப்பிரிவுகள் மற்றும் கட்டடங்களுக்கு அனுமதி பெறுதல் சார்ந்து மேற்படி தெரிவிக்கப்பட்ட அறிவுரைகளை அனைவரும் பின்பற்றி தங்களின் மனைப்பிரிவு மற்றும் கட்டடங்களுக்கான அனுமதியை இணைய வழியில் மட்டுமே விண்ணப்பித்து அனுமதி பெற்றிடுங்கள்" இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications