செங்கல்பட்டு டூ விழுப்புரம்.. வாகன ஓட்டிகளுக்கு விடிய விடிய நடந்த கசப்பான அனுபவம்
சென்னை: வாக்களிப்பதற்காக சென்னையில் இருந்து சொந்த ஊரை நோக்கி ஏராளமான மக்கள் நேற்று காலையில் இருந்தே கார், பைக் உள்ளிட்ட சொந்த வாகனங்களில் அதிக அளவில் சென்றார்கள். மாலை 6 மணிக்கு மேல் சொந்த வாகனங்களில் சென்ற மக்கள் பலர், சிங்கபெருமாள் கோவில் தொடங்கி விழுப்புரம் வரை கடுமையான நெரிசலை எதிர் கொண்டனர். காரிலும் இருசக்கர வாகனத்திலும் சென்ற பலர், திண்டிவனம் எப்போது வரும் என ஏங்கும் அளவிற்கு நிலைமை மோசமாகவே இருந்தது.
இன்று தமிழக சட்டசபை தேர்தல் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் வாக்களிப்பதற்காக லட்சக்கணக்கானோர் நேற்று சென்னையில் இருந்து கிளம்பி சென்றார்கள். அப்படி கிளம்பி சென்றவர்களுக்கு சென்னையின் நுழைவு வாயிலான பெருங்களத்தூரிலேயே ட்விஸ்ட் காத்திருந்தது. அங்கு நெரிசல் கடுமையாக இருந்தது. அதை கடந்தால் கிளாம்பாக்கத்தில் அதிகமாக இருந்தது. அங்கு தான் அப்படி இருக்கிறதே என்று ஊர்ந்து சென்றால் கூடுவாஞ்சேரியை கடக்க முடியவில்லை.. கூடுவாஞ்சேரியில் தான் இப்படி என்று விறுவிறு என்று கிளம்பி சென்றால், ஒவ்வொரு சிக்னலும் சத்தியசோதனையாகவே வாகன ஓட்டிகளுக்கு இருந்தது.

வாகன ஓட்டிகளுக்கு நேற்று சிங்க பெருமாள் கோவிலில் தான் சிக்கலே ஆரம்பம் ஆனது. அங்கு எந்த பிரச்சனையும் இல்லை.. அங்கு இருந்த ஒரு சிக்னல் வாகன ஓட்டிகளின் பொறுமையை கடுமையாக சோதித்தது. அதனை கடந்து பரனூரை தொடுவதற்குள் போதும் போதும் என்கிற அளவில் மாறியது.
பரனூரை கடந்தால் எல்லாம் சரியாகிவிடும் என்று நினைத்த வாகன ஓட்டிகளுக்கு அப்புறம் தான் நிலைமை உக்கிரமாக இருக்க போகிறது என்றே தெரியவில்லை. என்ன நடக்க போகிறது என்று தெரியாமல் சொந்த வாகனங்களில் சென்றவர்கள் ஆமை போல் ஊர்ந்தபடியே சென்றார்கள். செங்கல்பட்டை கடந்து சென்றவர்களுக்கு பாலாறு பாலம் பெரிய சோதனையை கொடுத்தது. ஏனெனில் செங்கல்பட்டு தொடங்க பாலாறு பாலம் வரை நெரிசல் மிக கடுமையாகவே இருந்தது. ஒரே நேரத்தில் பல ஆயிரம் வாகனங்கள் செல்லும் அளவிற்கு அந்த சாலை அகலமானது கிடையாது. அதேபோல் இரண்டு வண்டிக்கு மேல் வாகனங்கள் செல்லவே முடியாத அளவிற்கு தான் சாலையின் அகலமே உள்ளது. எனவே வாகன ஓட்டிகளால் நகரக்கூட முடியவில்லை..
பாலாறு பாலம் தான் கடந்துவிட்டோமே என்று ஆசுவாசப்படுத்தி கிளம்பினால், மேல்மருவத்தூர் வரையிலும் பாலம் கட்டும் வேலை காரணமாக வாகன ஓட்டிகள் நொந்து போனார்கள். இனி சரியாகும் என்று நம்பிக்கையை இழந்து விரக்தியோடு வாகன ஓட்டிகள் ஒருவழியாக திண்டிவனத்தை கடந்து நேரத்தை பார்த்தால், அதற்கே 4 மணி நேரம் ஆகியிருந்தது. அதன்பிறகும் அடித்து பிடித்து போகலாம் என்றால் விழுப்புரம் வரையிலும் நெரிசல் உக்கிரமாக இருந்தது. அதன்பிறகே ஓரளவு நெரிசல் குறைந்தது வாகன ஓட்டிகள் வேகமெடுத்து சென்றார்கள்.
செங்கல்பட்டு முதல் விழுப்புரம் வரை உள்ள சாலையில் விடுமுறை நாட்களில் செல்வது என்பது சாபம் என்பதாகவே இருக்கும். நேற்று உக்கிரமாகவே இருந்தது. வாகன ஓட்டிகள் பேசாமல் ரயிலில் போயிருக்கலாம், பேருந்தில் போயிருக்கலாம் என்று நொந்தபடியே சென்றனர்.












Click it and Unblock the Notifications