சென்னையில் கட்டுக்குள் கொரோனா.. முதல் அலை முடிவில்கூட இந்தளவு குறைந்ததில்லை.. சாத்தியமானது எப்படி
சென்னை: தலைநகர் சென்னையில் கொரோனா 2ஆம் அலைக்கு பிறகு, நேற்று வெறும் 127 பேருக்கு மட்டுமே வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. கடந்த ஆண்டு கொரோனா முதல் அலை முடிந்த போது கூட வைரஸ் பாதிப்பு இந்தளவு குறையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் அனைத்து மாநிலங்களைப் போலவே தமிழ்நாட்டிலும் கடந்த சில மாதங்களுக்கு முன் கொரோனா 2ஆம் அலை ஏற்பட்டது. கடந்த பிப்ரவரி- மார்ச் மாதங்களில் கொரோனா 2ஆம் அலை தொடங்கியது.
வெறும் 3 மாதம்..! தலைநகர் சென்னையில் அப்படியே தலைகீழ் மாற்றம்.. சாதித்துக் காட்டிய ககன்தீப்சிங் பேடி
அதைத் தொடர்ந்து மே மாத்தில் தமிழ்நாட்டில் கொரோனா 2ஆம் அலை உச்சம் தொட்டது. தினசரி கொரோனா பாதிப்பு அப்போது 35 ஆயிரம் வரை கூட சென்றது.
தலைநகர் சென்னை
கொரோனா முதல் அலையைப் போலவே இரண்டாம் அலையிலும் முதலில் அதிக பாதிப்புகளை எதிர்கொண்டது சென்னை தான். தலைநகர் சென்னையில் மே மாதத்தில் தினசரி வைரஸ் பாதிப்பு ஐந்தாயிரத்தைக் கூட தாண்டியிருந்தது. அப்போது நகரிலுள்ள அனைத்து மருத்துவமனைகளும் கொரோனா நோயாளிகளால் நிரம்பத் தொடங்கின.
கொரோனா ஊரடங்கு
குறிப்பாகத் தலைநகரிலேயே ஆக்சிஜன் படுக்கைகளுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டது. இதனால் நோயாளிகள் பல மணி நேரம் வரை மருத்துவமனை வெளியிலேயே ஆம்புலன்ஸ்களிலேயே காத்திருக்க வேண்டிய சூழலும் ஏற்பட்டது. இதனால் கொரோனா பாதிப்பு கைமீறிச் செல்வதைத் தடுக்க மாநிலத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. காய்கறி & மளிகைக் கடைகளுக்குக் கூட அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.
குறைய தொடங்கியது
முழு ஊரடங்கிற்குப் பின்னரே தினசரி வைரஸ் பாதிப்பு தலைநகரில் குறையத் தொடங்கியது. கொரோனா சோதனையில் புதிய திட்டம், கார் ஆம்புலன்ஸ் எனச் சென்னை மாநகராட்சி முன்னெடுத்த பல்வேறு திட்டங்களும் தலைநகரில் வைரஸ் பாதிப்பைக் கட்டுப்படுத்த தொடங்கியது. அப்படிக் கடந்த ஜூன் மாதம் சென்னையில் வைரஸ் பாதிப்பு ஆயிரத்திற்குக் கீழ் குறைந்தது.
127 பேர்
அதன் பின்னரும்கூட தினசரி வைரஸ் பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. தலைநகர் சென்னையில் ஜூலை 22ஆம் தேதி 133 பேருக்கும் ஜூலை 23ஆம் தேதி 130ஆம் தேதி 130 பேருக்கும் மட்டுமே வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்தது. நேற்று வைரஸ் பாதிப்பு மேலும் குறைந்து, வெறும் 127 பேருக்கு மட்டுமே கொரோனா கண்டறியப்பட்டுள்ளது.
முதல் அலையைக் காட்டிலும் குறைவு
கடந்த ஆண்டு கொரோனா முதல் அலை முடிந்த போது கூட வைரஸ் பாதிப்பு இந்தளவு குறையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா முதல் அலை முடிவில் கடந்த, பிப்ரவரி மாதம் தலைநகர் 134 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்தது. இப்போது அதைவிடக் குறைவான நபர்களுக்கு மட்டுமே தலைநகரில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த சென்னை மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், இது ஒரு முக்கிய மைல்கல் ஆகவே பார்க்கப்படுகிறது.
சென்னை
தலைநகர் சென்னையில் நேற்று மொத்தம் 23410 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் வைரஸ் 127 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. தற்போது தலைநகரில் 1604 பேர் கொரோனா சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையில் கொரோனா பாசிட்டிவ் விகிதம் 0.6% ஆக உள்ளது