Madurai Meenakshi: மதுரை மீனாட்சியம்மன் கோயில் திருத்தேரோட்டம்.. வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்!
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் கோலாகலமாக தொடங்கி இருக்கிறது. இதனையடுத்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். இதனால் மதுரை முழுக்க திருவிழாக் கோலம் பூண்டுள்ளது.
மதுரை மீனாட்சியம்மன் கோயிலின் சித்திரைத் திருவிழா ஏப்ரல் 19ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த திருவிழாவை முன்னிட்டு ஒவ்வொரு நாளும் காலை மற்றும் மாலை வேளைகளில் அம்மன் வீதி உலா வந்தனர். இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சியம்மன் - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நேற்று கோலாகலமாக நடைபெற்றது.

இதன்பின் நேற்று மாலை பூப்பல்லாக்கு வைபவம் சிறப்பாக நடந்தது. இந்த நிலையில் இன்று காலை திருத்தேரோட்டம் வெகு விமர்சையாக தொடங்கி இருக்கிறது. காலை 6.30 மணிக்கு தேரோட்டம் தொடங்கிய நிலையில் சுவாமி, அம்மனின் திருத்தேரானது மதுரை நகர வீதிகளான கீழமாசி வீதி, தெற்கு மாசி வீதி, மேலமாசி வீதி, வடக்குமாசி வீதிகளில் சுற்றி வரவுள்ளது.
மீனாட்சி - சுந்தரேஸ்வரரின் தேரோட்டத்தை காண்பதற்கு மதுரை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமானோர் குவிந்துள்ளனர். இதற்காக பல்லாயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். திருத்தேரோட்டம் காரணமாக மாசி வீதிகளில் முழுமையாக போக்குவரத்திற்கு தடை செய்யப்பட்டுள்ளது. அதேபோல் மாசி வீதிகளில் மின்சாரமும் தடை செய்யப்பட்டுள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உயரமாக செல்லும் மின் வயர்கள் அகற்றப்பட்டுள்ளன. அதேபோல் அவசர தேவைக்கு ஆம்புலன்ஸ் வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. திருத்தேரோட்டம் காரணமாக மதுரை முழுக்கவே விழாக்கோலம் பூண்டுள்ளன. ஏற்கனவே கள்ளழகர் மதுரை வந்துவிட்ட நிலையில், சித்திரைத் திருவிழா கொண்டாட்டம் அடுத்தக் கட்டத்தை எட்டும் என்று பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications