ஜூன் மாதத்தில் ராஜ்ய சபா எம்பியாகும் அண்ணாமலை? தேர்தலில் போட்டியிடாததற்கு காரணம் இதுதான்!
சென்னை: தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை ஆந்திராவில் இருந்து ராஜ்ய சபா எம்பியாக தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல் வெளி வந்துள்ளது. சட்டசபைத் தேர்தலுக்கு பின் மத்திய அமைச்சரவையில் இருந்து எல்.முருகன் நீக்கப்பட்டு, தமிழ்நாட்டில் இருந்து அண்ணாமலை அந்த இடத்திற்கு கொண்டு வரப்பட உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
தமிழக சட்டசபைத் தேர்தலில் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை போட்டியிடவில்லை. தமிழக பாஜக தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலை நீக்கப்பட்ட பின், அவருக்கு புதிதாக எந்த பொறுப்பும் அளிக்கப்படவில்லை. இந்த தேர்தலில் பாஜக மற்றும் அதிமுகவுக்காக பிரச்சாரம் மட்டுமே மேற்கொண்டார். சக்தி கேந்திரா பொறுப்பாளராக அண்ணாமலை நியமிக்கப்பட உள்ளதாக சொல்லப்பட்டது.

ஆனால் கடைசி நேரத்தில் பாஜக தலைமை அந்த பொறுப்பையும் அண்ணாமலைக்கு அளிக்கவில்லை. இந்த நிலையில் பாஜக தலைமையின் சொல்படி அண்ணாமலை பிரச்சாரத்தில் எந்தவித சுணக்கமும் இல்லாமல் செயல்பட்டதால், அவருக்கு அமைச்சர் பொறுப்பு அளிக்க முடிவு எடுத்திருக்கிறது. ஆந்திராவில் ஜூன் மாதம் 4 ராஜ்ய சபா எம்பிக்களின் பதவிகள் காலியாகிறது.
அதில் 3 எம்பிக்கள் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் தான். இந்த முறை அந்த கட்சிக்கு போதுமான எம்எல்ஏ-க்கள் பலம் இல்லாததால், அதனை தெலுங்கு தேசம் கட்சியும், பாஜகவும் பங்கு போட்டு கொள்கிறது. அதில் ஒரு எம்பியாக அண்ணாமலையை தேர்வு செய்ய பாஜக தலைமை முடிவு செய்துள்ளது. சந்திரபாபு நாயுடு குடும்பத்துடன் அண்ணாமலையும் நெருக்கம் காட்டி வருகிறார்.
இதன்பின் ஜூன் மாதம் மாற்றி அமைக்கப்படும் மத்திய அமைச்சரவையில் அண்ணாமலை பெயர் இடம்பெறும் என்று தெரிகிறது. கடந்த சட்டசபைத் தேர்தலுக்கு பின் எல்.முருகன் ராஜ்ய சபா எம்பியாக தேர்வு செய்யப்பட்டு, மத்திய இணையமைச்சராக பொறுப்பேற்றார். அதேபோல் இம்முறை அண்ணாமலைக்கு அந்த வாய்ப்பு வழங்கப்படவுள்ளது.
மத்திய அமைச்சரவையில் 5 ஆண்டுகள் எல்.முருகன் இருந்துவிட்டதால், அவரை கழற்றிவிட்டு புதியவர்களுக்கு வாய்ப்பு அளிக்க பாஜக தலைமை முடிவு செய்திருக்கிறது. அதன் காரணமாக அவினாசி தொகுதியில் எல்.முருகனை போட்டியிட பாஜக அனுப்பியது. எல்.முருகனின் செயல்பாடுகள் மீதும் பாஜக தலைமை அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது.
இதனால் எல்.முருகனை மத்திய அமைச்சரவையில் இருந்து வெளியேற்றிவிட்டு, மீண்டும் தமிழ்நாட்டைச் சேர்ந்த அண்ணாமலைக்கு அந்த பொறுப்பு அளிக்கப்பட உள்ளது. இதில் பிஎல் சந்தோஷின் கைகள் அதிகமிருப்பதாக சொல்லப்படுகிறது. இதன் காரணமாகவே அண்ணாமலை தேர்தலில் போட்டியிடாமல் தவிர்த்ததாக சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications