ஆட்டத்தை காட்டிய கிளாட் ஏஐ.. ஒன்பதே வினாடிகளில் அழிந்த ஒட்டுமொத்த தரவுத்தளம்.. ஷாக்கான அமெரிக்கா
சென்னை: தொழில்நுட்ப உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள ஒரு சம்பவத்தில், தன்னிச்சையாகச் செயல்படும் செயற்கை நுண்ணறிவு (AI) மென்பொருள் ஒன்று, ஒரு நிறுவனத்தின் ஒட்டுமொத்த தரவுகளையும் வெறும் 9 வினாடிகளில் அழித்துவிட்டது.
அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில் உள்ள கார் வாடகை நிறுவனங்களுக்கு மென்பொருள் சேவை வழங்கும் 'பாக்கெட் ஓஎஸ்' (PocketOS) என்ற நிறுவனத்திற்குத்தான் இந்த கதி ஏற்பட்டுள்ளது. அந்த நிறுவனத்தின் தரவுத்தளம் (Production Database) மற்றும் அதன் பாதுகாப்பு நகல்கள் (Backups) என அனைத்தும் அந்த ஒன்பது வினாடிகளில் காணாமல் போயின.

நடந்தது என்ன?
இந்த விபத்திற்கு 'கிளாட் ஓபஸ் 4.6' (Claude Opus 4.6) என்ற சக்திவாய்ந்த செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கும் 'கர்சர் ஏஐ' (Cursor AI) என்ற கோடிங் ஏஜென்ட் காரணமாக அமைந்தது.
பொதுவாக மென்பொருள்களை நேரடியாகப் பயன்பாட்டிற்கு விடுவதற்கு முன்பு, 'ஸ்டேஜிங்' (Staging) எனப்படும் ஒரு தனிப் பகுதியில் சோதித்துப் பார்ப்பார்கள். அங்கு ஏதேனும் தவறு நடந்தால் அது நேரடிப் பயன்பாட்டைப் பாதிக்காது. அந்த ஏஜென்ட்டிற்கு ஒரு சாதாரணப் பணியை வழங்கியபோது, அதற்குத் தேவையான சில கடவுச்சொற்கள் (Credentials) சரியாகப் பொருந்தவில்லை.
சாதாரண சூழலில், ஒரு மென்பொருள் மனிதனின் அனுமதியைக் கேட்க வேண்டும். ஆனால், இந்த ஏஐ ஏஜென்ட் தன்னிச்சையாகச் செயல்பட்டு, மென்பொருள் குறியீடுகளில் (Codebase) தேடி ஒரு ரகசியத் திறவுகோலைக் (API Token -ஏபிஐ டோக்கன்: ஒரு மென்பொருள் மற்றொரு மென்பொருளுடன் பாதுகாப்பாகத் தொடர்புகொள்ளப் பயன்படுத்தப்படும் ஒரு ரகசிய டிஜிட்டல் சாவி அல்லது கடவுச்சொல் ) கண்டுபிடித்தது. அதைப் பயன்படுத்தி ஒரு கட்டளையை (Command) பிறப்பித்தது. துரதிர்ஷ்டவசமாக, அந்த ஒரு கட்டளை 'ஸ்டேஜிங்' பகுதியை மட்டும் அழிக்காமல், நிறுவனத்தின் நேரடித் தரவுத்தளத்தையும் சேர்த்து அழித்துவிட்டது.
ஏன் இந்த அழிவு?
இந்த விபத்திற்கு இரண்டு முக்கிய காரணங்கள் கூறப்படுகின்றன:
ஏஐ-யின் அதீத வேகம்: தனக்குத் தெரியாத விஷயத்தில் மனித உதவியை நாடாமல், ஏஐ தானாகவே ஒரு முடிவை எடுத்தது சிக்கலாக மாறியது.
கட்டமைப்பு குறைபாடு: அந்த நிறுவனம் தரவுகளைச் சேமிக்கப் பயன்படுத்திய 'ரயில்வே' (Railway) என்ற தளம், முதன்மைத் தரவுகளையும் அதன் பாதுகாப்பு நகல்களையும் ஒரே இடத்திலேயே வைத்திருந்தது. இதனால் ஒரே ஒரு 'டெலீட்' கட்டளை அனைத்தையும் துடைத்து எரிந்துவிட்டது.
ஏஐ அளித்த பகீர் வாக்குமூலம்
இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, பாக்கெட் ஓஎஸ் நிறுவனர் ஜெர் கிரேன் அந்த ஏஐ மென்பொருளிடம் விளக்கம் கேட்டார். அப்போது அது அளித்த பதில் அனைவரையும் அதிர வைத்தது. தான் தவறு செய்துவிட்டதை ஒப்புக்கொண்ட ஏஐ, "நான் உறுதிப்படுத்திக் கொள்வதற்குப் பதிலாக, எல்லாம் சரியாக இருக்கும் என்று ஊகித்துச் செயல்பட்டேன்" என்று கூறியது. தனது விதிகளில் அழிவை ஏற்படுத்தும் செயல்களைச் செய்யக்கூடாது என்று இருந்தும், தான் அதை மீறியதை அது ஒப்புக்கொண்டது.
சுமார் 30 மணிநேரப் போராட்டத்திற்குப் பிறகு, மூன்று மாதங்களுக்கு முந்தைய பழைய தரவுகளைக் கொண்டு நிறுவனம் தற்போது மீண்டு வர முயன்று வருகிறது. ஏஐ மூலம் நிறைய ஆபத்துகள் ஏற்படலாம் என்று எச்சரிக்கைகள் விடுக்கப்படும் நிலையில்.. கிளாட் ஓபஸ் 4.6' (Claude Opus 4.6) செய்த இந்த சம்பவம் பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.












Click it and Unblock the Notifications