வண்டலூர் உயிரியல் பூங்காவில் முதலையின் வாயில் சிக்கிய ஊழியர் விஜய்.. இழுத்து சென்றதால் பரபரப்பு
சென்னை: சென்னையை அடுத்த வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஊழியர் ஒருவரை முதலை கடித்து இழுத்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முதலையிடம் சிக்கிய அந்த ஊழியரை, சக ஊழியர்கள் போராடி காப்பாற்றினார்கள்.
சென்னையை அடுத்த வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா 1490 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள மிகப்பெரிய வனவிலங்கு பூங்காக்களில் ஒன்று. பிரமாண்டமான இந்த பூங்கா இயற்கை ஆர்வலர்கள் மற்றும் விலங்கு ஆர்வலர்களுக்கு மிகவும் பிடித்த இடமாக இருக்கிறது. சிங்கம், புலி, கரடி, கழுதைப்புலி, மான், பாம்பு வகைகள், குரங்குகள், முதலைகள் மற்றும் யானைகள் என பல வனவிலங்குகள் வண்டலூர் பூங்காவில் வசிக்கின்றன.

வண்டலூர் பூங்காவில் உள்ள விலங்குகள், தாவரங்கள் மிகவும் தனித்துவமானது. இதை காண தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகிறாரகள். தமிழ்நாட்டில் ஏரளமான வனவிலங்குகளை ஒர இடத்தில் காணக்கூடிய வாய்ப்பு வண்டலூர் உயிரியல் பூங்காவில் தான் இருக்கிறது.
வண்டலூர் பூங்காவில் ஏராளமான முதலைகள் உள்ளன. இந்த முதலைகளை பராமரிக்கும் பணியில் 24 வயதாகும் விஜய் என்ற தற்காலிக ஊழியர் பணிபுரிந்து வருகின்றார். இவர், வண்டலூர் உயிரியல் பூங்கா குடியிருப்பு பகுதியில் வசித்து வருகிறார்.
தற்காலிக ஊழியர் விஜய் வழக்கம் போல் பூங்காவில் முதலைகள் இருப்பிடத்தில் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு வந்தார். அப்போது திடீரென ஒரு முதலை விஜயின் காலை கடித்து தண்ணீர் குட்டைக்கு இழுத்துச்செல்ல முயன்றிருக்கிறது. வலி தாங்க முடியாமல் அலறி துடித்த விஜய், கத்தி கூச்சலிட்டு சக ஊழியர்களை உதவிக்கு கூப்பிட்டார்.
இதனிடையே விஜயின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த சக ஊழியர்கள், விஜயின் காலை முதலை கடித்து இழுத்து செல்ல முயன்றதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்கள். உடனடியாக முதலையை உருட்டு கட்டையால் தாக்கி, விஜய்யை முதலையிடம் இருந்து மீட்டார்கள்.
முதலை கடித்ததால் காயம் அடைந்த அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரது காலில் தையல் போடப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் பூங்கா ஊழியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து பூங்கா அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications