மலப்புழு, நெருப்பு மழை.. அசோக்நகர் அபத்தம்.. திமுகவிடம் போன செல்வப்பெருந்தகை.. இதை முதல்ல பண்ணிடுங்க
சென்னை: தமிழக கல்வித்துறையில் வகுப்புவாத மற்றும் பகுத்தறிவுக்கு விரோதமான கருத்துகள் கூறுவதை தடுக்கிற வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு தமிழக காங்கிரஸ் வேண்டுகோள் விடுத்துள்ளது.
சென்னை அசோக்நகர் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில், "மந்திரம் சொன்னால் பிரபஞ்ச சக்தி இறங்கும்" என்று மூடநம்பிக்கைகளை விதைக்கும் வகையில், நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டுள்ளது. இந்த வீடியோ சோஷியல் மீடியாக்களில் வெளியாகி கடும் அதிர்ச்சியையும், பெரும் சர்ச்சையையும் ஏற்படுத்தி வருகின்றன.

அரசு பள்ளி: மகாவிஷ்ணு என்பவர் இந்த சொற்பொழிவினை, அரசு பள்ளிகளில் நடத்தியிருக்கிறார்.. தன்னம்பிக்கை பேச்சு என்ற தலைப்பில், ஆன்மிக சொற்பொழிவை நடத்தியிருப்பதாக கண்டனங்கள் குவிந்துள்ளன.
கடந்த காலங்களில் செய்த பாவங்களுக்கு ஏற்ப இந்த ஜென்மம் கடவுளால் படைக்கப்பட்டிருக்கிறது என்று மாணவர்கள் மத்தியில் மகாவிஷ்ணு பேசியிருப்பதும், மாற்று திறனாளிகள், ஏழைகளாக இருப்பவர்கள், முன் ஜென்ம பாவத்தின் காரணமாக அப்படி இருக்கிறார்கள் என்றும் பேசியிருப்பதும், கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
மாற்றுத்திறனாளி: இந்த பேச்சால் கோபமான பார்வை மாற்றுதிறனாளி ஆசிரியர் ஒருவர் இதனை மகாவிஷ்ணுவை தட்டிக்கேட்டிருக்கிறார்.. அதற்கு மகாவிஷ்ணு ஆசிரியரிடமே மோசமாக நடந்து கொண்ட வீடியோ இணையத்தில் பரவி, அதற்கு மேல் கண்டனங்களை குவித்து வருகிறது. இதையடுத்து, அசோக் நகர் பள்ளியின் தலைமை ஆசிரியை பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். எனினும், தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் இந்த நிகழ்வுக்கு கண்டனங்களை பதிவு செய்து வருகிறார்கள்.
அந்தவகையில், தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையும், இதனை கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.. அந்த அறிக்கையில், "சென்னை அசோக் நகரில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நிகழ்ந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. மாணவிகளுக்கு தன்னம்பிக்கையூட்டும் நிகழ்ச்சி நடத்தப்பட்டதில் ஒரு பேச்சாளர் மூட நம்பிக்கையை வளர்க்கும் வகையில் பகுத்தறிவுக்கு விரோதமாக கருத்துகளை கூறியிருக்கிறார்.
மூட நம்பிக்கை: கல்வியறிவை வளர்க்க வேண்டிய பள்ளிகளில் மூட நம்பிக்கையை வளர்ப்பவர்கள் சமூக அக்கறையில்லாதவர்களாகவே கருதப்படுவார்கள். அங்கே உரையாற்றிய பேச்சாளர் குறிப்பிட்ட மத உணர்வை தூண்டுகிற சனாதன கருத்துகளை பகிரங்கமாக மாணவிகள் மத்தியில் கூறியிருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன். இந்த நிகழ்வுக்கு ஏற்பாடு செய்த தலைமையாசிரியை பணியிடமாற்றம் செய்யப்பட்டிருப்பதை வரவேற்கிறேன்.
தமிழகத்தில் சமீபகாலமாக வகுப்புவாத சக்திகள் கடவுளின் பெயராலும், மதத்தின் பெயராலும் ஊடுருவ முயற்சிப்பதை தந்தை பெரியார், பெருந்தலைவர் காமராஜர் பிறந்த மண்ணில் அனுமதிக்க முடியாது.
பள்ளிகள்: அனைத்து மதங்களுக்கும் பொதுவான இடமாகவே பள்ளிகள் இருக்க வேண்டும். போன ஜென்மத்தில் எதை செய்கிறீர்களோ, அதனுடைய பலனைத் தான் இந்த ஜென்மத்தில் நீங்கள் அனுபவிக்க வேண்டுமென்று அறிவியலுக்கு விரோதமாக அந்த குறிப்பிட்ட பேச்சாளர் மாணவிகளிடையே பேசியிருப்பதை எவராலும் சகித்துக் கொள்ள முடியாது. எல்லாவற்றையும் பிறப்பின் அடிப்படையில் தான் முடிவு செய்யப்படும் என்று கூறியிருப்பது மிகுந்த கண்டனத்திற்குரியது.
எனவே, தமிழக கல்வித்துறையில் வகுப்புவாத மற்றும் பகுத்தறிவுக்கு விரோதமான கருத்துகள் கூறுவதை தடுக்கிற வகையில் உரிய நடவடிக்கையை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் உடனடியாக எடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.
கடும் கண்டனம்: மாணவ - மாணவிகளிடையே இத்தகைய நச்சு கருத்துகள் கூறுவது அனுமதிக்கப்பட்டால் மிகப்பெரிய பேராபத்தை தமிழகம் எதிர்நோக்க நேரிடும் என எச்சரிக்க விரும்புகிறேன்" என்று காட்டமாக தெரிவித்திருக்கிறார்.
முன்னதாக மகாவிஷ்ணு தன்னுடைய உரையில், "அரசுப் பள்ளியில் ஆன்மீகம் பேசக்கூடாது என்று யார் சொன்னது? அப்படி ஏதாவது சட்டம் இருக்கிறதா? இந்திய அரசியலமைப்புச் சட்டம் சொல்கிறதா? முதன்மை கல்வி அலுவலரை விட நீங்கள் அறிவு பெற்றவரா?
திருமந்திரம்: நீ அதிகமாக பாவம் செய்தால் மலத்தில் ஊறும் புழுவாக பிறப்பாய் என்று திருமூலர் திருமந்திரத்தில் எழுதுகிறார். திருமூலரை தாண்டி ஞானம் யாருக்காவது இருக்கிறதா? தெளிவு யாருக்காவது இருக்கிறதா? உங்களுக்கு ஏன் இவ்வளவு பிரச்சனை? உண்மை என்றால் என்ன? தர்மம், சத்தியம் என்றால் என்ன? நியாயம், கருணை என்றால் என்ன?
ஒரு மந்திரத்தை படித்தால் நெருப்பு மழை பொழியும். ஒரு மந்திரத்தை படித்தால் உடல் நோய் குணமாகும். இங்கிருந்து அங்கே பறந்து செல்ல முடியும். அத்தனையும் ரகசியங்களையும் பனை ஓலையில் முன்னோர்கள் எழுதி வைத்து விட்டுச் சென்றனர். ஆங்கிலேயர்களின் சதி வேலை காரணமாக நம் மக்களின் ஞானம் மண்ணோடு மண்ணாக புதைந்தது" என்றெல்லாம் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications