அயனாவரத்தில் பெண் தூய்மை பணியாளரிடம் ஆபாச செய்கை.. தாத்தாவை அலேக்காக தூக்கிட்டு போன சென்னை போலீஸ்
சென்னை: பெண்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை மேலும் அதிகரிக்க வேண்டிய அவசியம் தமிழகத்தில் தொடர்ந்து எழுந்துள்ளது.. பெண்களுக்கு எதிரான குற்றங்களை முற்றிலும் தடுக்க தொடர்ந்து கண்காணிப்பு மற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும், யாராக இருந்தாலும் சட்டத்தை மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை தொடர்ந்து நம்பிக்கை தந்து வருகிறது.. எனினும்கூட பாலியல் சம்பவங்கள் அதிகரித்தபடியே உள்ளன.
சென்னை மாநகரத்தை சுத்தம் செய்யும் பணிகளில் நூற்றுக்கணக்கான தூய்மைப் பணியாளர்கள் பணியாற்றுகின்றனர்.

தூய்மை பணியாளர்கள்
இரவு 11 மணிக்கு ஆரம்பிக்கும் இவர்களது பணி அதிகாலை வரை தொடர்ந்து நடைபெறும்.. ஆரம்பத்தில் தனியாக தூய்மை பணியில் ஈடுபடும் பெண்களுக்கு பாலியல் சீண்டல் தொல்லை இருந்ததால் பெண்கள் குழுவாக இணைந்து பணியாற்றி வருகிறார்கள்.. அப்படியிருந்தும்கூட பாலியல் சீண்டல்களை அதிகமாக எதிர்கொண்டு வருகிறார்கள்..
சில தினங்களுக்கு முன்பு அடையாறு பாலம் அருகில் 50 வயது தூய்மைப் பணியாளர் ஒருவர் தூய்மைப்பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த இளைஞர் ஒருவர், அப்பெண்ணிடம் அநாகரீகமாக நடந்து கொண்டுள்ளார்..
இதனால் ஆத்திரமடைந்த அந்த பெண், கையிலிருந்த துடைப்பத்தால் அந்த இளைஞரை சரமாரியாக வெளுத்து எடுத்துள்ளார்.. பிறகு அந்த இளைஞர், அங்கிருந்து எகிறி தப்பி ஓடிவிட்டார். இந்த சம்பவம் முழுவதும் அங்கிருந்த சிசிடிவி காட்சியில் பதிவாகி, அது சோஷியல் மீடியாவிலும் வைரலாகிவிட்டது..
சென்னை அயனாவரம்
இந்த அதிர்ச்சி வீடியோவானது காவல்துறையினரின் கவனத்துக்கு சென்றதையடுத்து, சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணையை மேற்கொண்டனர்.. இறுதியில் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக போரூர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஆந்திராவை சேர்ந்த பச்சூ சாய் தேஜா என்ற 25 நபரை கைது செய்திருந்தது நினைவிருக்கலாம்.
இதோ மீண்டும் ஒரு அட்டகாசம் சென்னையில் நடந்துள்ளது.. சென்னை அயனாவரம் இப்ராகிம் ஷாகிப் மெயின் ரோடு பகுதியானது, பொதுமக்கள் அதிகம் நடமாடும் பிரதான சாலையாகும்.. மாநகராட்சிக்கு சொந்தமான தூய்மை பணியில், பெண் ஒருவர் ஈடுபட்டு வந்துள்ளார்.
அப்போது அந்த வழியாக நடந்து சென்ற முதியவர் ஒருவர், திடீரென பெண் தூய்மை பணியாளரை நோக்கி ஆபாசமான செய்கைகளை செய்து, பாலியல் ரீதியான தொந்தரவு அளித்ததாக கூறப்படுகிறது. பட்டப்பகலில், அதுவும் பொதுமக்கள் முன்னிலையில் நடந்த இந்த செயலால் அதிர்ச்சியடைந்த அந்த பெண், உடனடியாக அந்த முதியவரிடமே கடுமையான எதிர்ப்பு தெரிவித்து, தட்டி கேட்டுள்ளார்..
பாலியல் தொல்லை தந்த தாத்தா
உடனே அந்த முதியவர் அங்கிருந்து நகர்ந்து செல்ல முயன்றுள்ளார். ஆனால் அதற்குள் அங்கிருந்த பொதுமக்கள் ஒன்று திரண்டு முதியவரை மடக்கிபிடித்து தர்ம அடி கொடுத்தனர்.. சம்பவம் குறித்து தகவலறிந்த அயனாவரம் போலீசார், விரைந்து சென்று, பொதுமக்களிடமிருந்து முதியவரை மீட்டு, அவரை பாதுகாப்பாக ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றனர்.
பிறகு பாதிக்கப்பட்ட பெண் தூய்மை பணியாளரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.. அப்பெண் அளித்த புகாரின் அடிப்படையில், முதியவர் மீது பாலியல் தொந்தரவு தொடர்பான பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.. இப்போது முதியவர் கைதாகி விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்..
பொது இடங்களில் பெண்கள் பாதுகாப்பு என்பது மிக முக்கியமானது.. குறிப்பாக கடினமான பணியில் ஈடுபடும் தூய்மை பணியாளர்கள் மீது இதுபோன்ற அத்துமீறல்கள் நடைபெறுவது மிகுந்த வேதனையளிப்பதாகவும், இத்தகைய சம்பவங்களில் குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கைகள் வலுத்துள்ளன.












Click it and Unblock the Notifications