சென்னை மின்சார ரயில்களில் ஏசி பெட்டிகள்.. எப்போது பயன்பாட்டுக்கு வரும்? பயணிகளுக்கு குளுகுளு அப்டேட்
சென்னை: சென்னை புறநகர் ரயில்களை பொறுத்தவரை முதல் வகுப்பு மற்றும் பெண்களுக்கு என தனியாக பெட்டி இருந்தாலும், ஏசி பெட்டிகள் இல்லாதது ஒரு குறையாகவே உள்ளது. இதையடுத்து தான் தற்போது ஏசி பெட்டிகள் தயாரிக்கும் பணிகள் ஐசிஎப்பில் நடந்து வருகிறது. இந்நிலையில், சென்னை கடற்கரை முதல் செங்கல்பட்டு வரை இயக்கப்படும் மின்சார ரயில்களில் ஏசி பெட்டிகள் எப்போது இணைக்கப்படும் என்ற தகவலை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது.
சென்னையில் பயணிகளின் போக்குவரத்து தேவையை தீர்த்து வைப்பது மின்சார ரயில்கள்தான். சென்னை புறநகரில் இருந்து நகருக்குள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி கொள்ளாமல் எளிதாக வர முடியும் என்பதால் அனைத்து தரப்பு மக்களும் புறநகர் ரயில்களையே சார்ந்து இருக்கிறார்கள். சென்னையை பொறுத்தவரை செங்கல்பட்டு - பீச் வழித்தடத்தில் இயக்கப்படும் மின்சார ரயில்கள்தான் மிக முக்கிய ரூட் ஆக உள்ளது.

புறநகர் மின்சார ரயில்: சில நிமிடங்கள் இந்த வழித்தடத்தில் ரயில்கள் இயக்கப்படாவிட்டலும் மொத்த சென்னையே ஸ்தம்பித்து விடும் என்று சொல்லும் அளவிற்கு கடுமையான போக்குவரத்து நெரிசல் எற்பட்டு விடும். பள்ளி, கல்லூரிகள் செல்லும் மாணவ, மாணவிகள் அலுவலகம் செல்வோர்கள் என அனைத்து தரப்பினரும் புறநகர் ரயில்களையே சார்ந்து இருப்பதால் இந்த ரயில்களில் எப்போதும் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது.
ஏசி பெட்டிகள்: தினமும் 600-க்கும் மேற்பட்ட மின்சார ரயில் சேவைகள் இயக்கப்படுகிறது. பயணிகளின் வசதி மற்றும் கோரிக்கைக்கு ஏற்ப புதிய திட்டங்களை ரயில்வே அவ்வப்போது அறிமுகம் செய்து வருகிறது. புறநகர் ரயில்களை பொறுத்தவரை முதல் வகுப்பு மற்றும் பெண்களுக்கு என தனியாக பெட்டி உள்ளது. எனினும், தனியாக ஏசி பெட்டிகளை இணைக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
முழு வீச்சில் பணிகள்: இதையடுத்து, சென்னை புறநகர் மின்சார ரயில்களில் ஏசி பெட்டியை இணைப்பது குறித்து ஆய்வு செய்யுமாறு தெற்கு ரெயில்வேக்கு சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் பரிந்துரை செய்திருந்தது. இதன்படி, சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்த தெற்கு ரயில்வே சென்னை ஐசிஎப்பில் ஏசி பெட்டிகள் தயாரிக்கும் பணியை தொடங்கியது. தற்போது முழு வீச்சில் இந்த பெட்டிகள் தயராகி வருகின்றன.
சோதனை ஓட்டம்: ரயில் பெட்டிகள் தயாரிக்கும் பணிகள் முடிந்த பிறகு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே வரும் நவம்பர் மாதத்தில் சோதனை ஓட்டத்தை நடத்தவும் தெற்கு ரெயில்வே திட்டமிட்டுள்ளது. சோதனை ஓட்டம் வெற்றி அடைந்தால், அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு ஏசி பெட்டிகளை கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளது.
எப்போது பயன்பாட்டுக்கு வரும்?: இது தொடர்பாக தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், "பெரம்பூரில் உள்ள ஐசிஎப்பில் மும்பை புறநகர் மின்சார ரயிலுக்காக ஏசி பெட்டிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. தெற்கு ரயில்வேக்கு 12 ஏசி பெட்டிகள் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. விரைவில் சோதனை ஓட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. எனவே, வரும் 2025 ஆம் ஆண்டிற்குள் ஏசி பெட்டிகளை இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது" என்றனர்.
கட்டணம் எப்படி?: கோடை காலத்தில் கடுமையான வெப்பம் நிலவும். இந்த நேரத்தில் சாதராண பெட்டிகள் பயணிக்கும் போது புழுக்கம் அதிகமாக இருக்கும் என்பதால் ஏசி பெட்டிகள் இணைக்கப்படுவதால் சிரமம் இன்றி பயணிக்க முடியும் என்று பயணிகள் தரப்பில் தெரிவித்துள்ளனர். முதல் வகுப்பு பெட்டிகளுக்கு தனியாக கட்டணம் உள்ளது போல ஏசி பெட்டிகளுக்கு தனியாக கட்டணம் இருக்கும் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications