சென்னை மக்களே நோட் பண்ணுங்க.. இன்று முதல் கடற்கரை - தாம்பரம் மின்சார ரயில் ரத்து! எத்தனை நாள்?
சென்னை: பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னை கடற்கரை ரயில் நிலையம் - தாம்பரம் ரயில் நிலையம் இடையிலான நாளின் கடைசி இரவு நேர மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்பட்டு உள்ளது.
சென்னை மக்களின் பிரதான போக்குவரத்தாக மின்சார ரயில் இருந்து வருகிறது. சென்னை மன்னடி அருகே உள்ள கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து மாநகரின் பல்வேறு நகரங்கள் மற்றும் புறநகர் பகுதிகளுக்கு மின்சார ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் வேலைக்கு செல்வோர், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ மாணவிகள், பெண்கள், முதியோர்கள், வியாபாரிகள் என பல லட்சக்கணக்கானோர் பயனடைந்து வருகின்றனர். சென்னையின் முக்கிய போக்குவரத்தாக பார்க்கப்படும் இந்த மின்சார ரயில் சேவை அவ்வப்போது பராமரிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், பராமரிப்பு காரணமாக இன்று முதல் கடற்கரை ரயில் நிலையம் - தாம்பரம் ரயில் நிலையம் இடையிலான இரவு மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்பட்டு உள்ளது. இன்று முதல் டிசம்பர் 14 ஆம் தேதி வரை சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து தாம்பரம் ரயில் நிலையம் செல்லும் நாளின் கடைசி இரவு நேர ரயில் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்து இருக்கிறது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் வெளியிட்டு இருக்கும் செய்திக் குறிப்பில், "பயணிகளின் பாதுகாப்பு கருதி தாம்பரம் ரயில் நிலையத்தில் நவம்பர் 29 ஆம் தேதி முதல் டிசம்பர் 14 ஆம் தேதி வரை நள்ளிரவு 12.25 முதல் அதிகாலை 2.25 வரை பொறியியல் வேலைகள் மற்றும் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன. இதனால், அந்த நாட்களில் சென்னை கடற்கரையிலிருந்து இரவு 11.59 மணிக்கு தாம்பரம் செல்லும் மின்சார ரயிலும், மறு மார்க்கமாக தாம்பரத்திலிருந்து இரவு 11.40 மணிக்கு கடற்கரைக்கு செல்லும் ரயிலும் முழுமையாக ரத்து செய்யப்படும்" என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இரவு வரை பணி, வியாபாரம் செய்து முடித்துவிட்டு வீடு திரும்புவோர் பலர் இந்த கடைசி ரயிலை பயன்படுத்தி வந்த நிலையில், இந்த சேவை ரத்து செய்யப்பட்டு இருப்பதால் மாற்று போக்குவரத்து வழியை நாடும் நிலை ஏற்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications