சென்னை வந்த ஏர் இந்தியா விமானத்தில் கருகிய வாசனை.. அவசரமாக தரையிறக்கப்பட்டு பயணிகள் வெளியேற்றம்
சென்னை: மும்பையில் இருந்து சென்னைக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், கேபினில் கருகும் வாசனை அடித்ததன் காரணமாக மும்பை விமானத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இதனால் பயணிகள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.
மும்பை விமான நிலையத்தில் இருந்து நேற்று இரவு 10.55 மணிக்கு சென்னை நோக்கி புறப்பட்ட 'ஏர் இந்தியா' நிறுவனத்தின் AI 639 விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் மும்பை விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டு அவசரமாக தரையிறக்கப்பட்டது. உடனடியாக விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக ஏர் இந்தியா விமானம் தரையிறக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. அந்த விமானத்தில் பயணிக்க இருந்த பயணிகள் மாற்று விமானத்தில் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்நிலையில், இந்தச் சம்பவம் குறித்து 'ஏர் இந்தியா' நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் அளித்துள்ள விளக்கத்தில், விமானத்தின் கேபினில் கருகிய வாசனை வந்ததால் விமானம் அவசரமாக தரையிறக்கம் செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
மும்பை விமான நிலையத்தில் தயார் நிலையில் இருந்த 'ஏர் இந்தியா' நிறுவன ஊழியர்கள், பயணிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் ஏற்பாடு செய்து கொடுத்ததாகவும், பயணிகள் மற்றும் விமான ஊழியர்களின் பாதுகாப்பே தங்கள் முன்னுரிமை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூன் 12 ஆம் தேதி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டன் நோக்கிச் சென்ற ஏர் இந்தியா விமானம் AI171 விபத்துக்குள்ளானதில் 270 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் உலகம் முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்த நிலையில், ஏர் இந்தியா விமானத்தின் கேபினில் எரிந்த வாசனை வந்ததால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.












Click it and Unblock the Notifications