சென்னையே திணறுது.. பஸ்களில் நெருக்கியடிக்கும் பயணிகள் கூட்டம்.. ரயில்கள் ரத்தால் நடந்த மாற்றம்!
சென்னை: சென்னை கடற்கரை - தாம்பரம் மார்க்கத்தில் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டதன் காரணமாக பேருந்துகளில் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.
சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக 55 மின்சார ரயில்கள் வரும் ஆகஸ்ட் 14 ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னை கடற்கரை - செங்கல்பட்டு மார்க்கத்தில் நேற்றும் இன்றும் காலை 9.30 மணி முதல் இரவு 10.40 மணி வரை இயக்கப்படும் சில மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

சென்னை கடற்கரை- தாம்பரம் இடையே காலை 9.40 முதல் இரவு 11.59 மணிவரை இயக்கப்படும் சில மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. சென்னை கடற்கரை - கூடுவாஞ்சேரி இடையே இரவு 7.19, 8.15, 8.45, 8.55 மற்றும் 9.40 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதேபோல் தாம்பரம் - சென்னை கடற்கரை மார்க்கத்தில் காலை 10.30 மணி முதல் இரவு 11.40 மணி வரை இயக்கப்படும் சில மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு - கும்மிடிப்பூண்டி இடையே காலை 10 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயிலும், காஞ்சிபுரம் - சென்னை கடற்கரை மார்க்கத்தில் காலை 9.30 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதன் காரணமாக, கூடுதல் எண்ணிக்கையில் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் தடுக்க கூடுதல் காவலர்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
இந்நிலையில், இன்று சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் பேருந்துகளில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. ரயில்கள் ரத்து காரணமாக பெரும்பாலானோர், பேருந்து போக்குவரத்தை தேர்வு செய்து வருகின்றனர்.
இதன் காரணமாக முக்கிய வழித்தடங்களில் ஓடும் பேசுந்துகளில் மக்கள் அதிகளவில் பயணம் செய்து வருகின்றனர். ஞாயிற்றுக்கிழமையான இன்று பேருந்து நிறுத்தங்களில் நூற்றுக்கணக்கான மக்கள் காத்திருந்து பயணித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications