கார்த்தி சிதம்பரம் ஆடிட்டரை டெல்லி அழைத்துச் செல்ல சென்னை நீதிமன்றம் அனுமதி
சென்னை: சிவகங்கை எம்பி கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கரை டெல்லி அழைத்து செல்ல சிபிஐக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை காங்கிரஸ் ஆட்சியில் ப சிதம்பரம் மத்திய அமைச்சராக இருந்த போது பஞ்சாப்பின் தால்வாண்டி சாபோ மின் திட்டம் செயல்படுத்தப்பட்டது.
இந்த மின் திடடம் சீனாவை சேர்ந்த ஷான்டாங் எலக்ட்ரிக் பவர் கன்ஸ்டிரக்ஷன் கார்ப் என்ற நிறுவனத்திற்கு கொடுக்கப்பட்டது. இந்த திட்டத்தை செயல்படுத்த தாமதம் ஏற்பட்டது. இதனால் சீன தொழில்நுட்ப நிபுணர்களை கொண்டு வர அந்த நிறுவனம் முயற்சித்தது. இதற்கு மத்திய உள்துறை அமைச்சகம் விதித்த உச்ச வரம்புக்கு மேல் விசாக்கள் தேவைப்பட்டன.
Recommended Video
இதனால் சீன நிறுவனம் கார்த்தி சிதம்பரத்தை அணுகியதாக சொல்லப்படுகிறது. சீனர்கள் இந்தியா வருவதற்கு சட்டவிரோதமாக 263 விசாக்கள் வழங்கப்பட்டதாக புகார் என தகவல் வெளியாகியிருந்தது. சீனர்களுக்கு விசா வழங்க ரூ 50 லட்சம் லஞ்சம் பெற்றதாக கார்த்தி சிதம்பரம் மீது சிபிஐ புதியொரு வழக்கை பதிவு செய்துள்ளது.
இந்த நிலையில் கார்த்தி சிதம்பரம் தொடர்புடைய வழக்கில் நேற்றைய தினம் காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் நிதியமைச்சருமான ப சிதம்பரத்தின் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான பல இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
அப்போது எம்பி கார்த்தி சிதம்பரத்தின் வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களிலும் 5 மணி நேரத்திற்கும் மேலாக சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். சென்னையில் 3 இடங்களிலும் மும்பையில் 2 இடங்களிலும் டெல்லியில் உள்ள ப சிதம்பரம் வீடு, கர்நாடகா, பஞ்சாப், ஒடிஸா ஆகிய மாநிலங்களில் தலா ஒரு இடம் என மொத்தம் 10 இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டது.
விசா முறைகேடு வழக்கில் கார்த்தி சிதம்பரத்தின் கணக்கு தணிக்கையாளர் அதாவது ஆடிட்டர் பாஸ்கரராமன் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். சீனர்களுக்கு விசா வாங்கி தந்ததற்கு ரூ 50 லட்சம் பெற்று முறைகேடு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் பாஸ்கரராமன் சிபிஐ நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டார்.
இந்த நிலையில் கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கர ராமனை டெல்லி அழைத்து செல்ல சிபிஐக்கு நீதிமன்றம் அனுமித வழங்கியுள்ளது. அவரை டெல்லி அழைத்து செல்ல டிரான்சிட் வாரண்ட் வழங்கி சென்னை சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.