சென்னை டூ நாகர்கோவில்! சம்மர் ஸ்பெஷல் ரயில்.. புறப்படும் நேரம் மாற்றம்.. பயணிகளே நோட் பண்ணுங்க
சென்னை டூ நாகர்கோவில்! சம்மர் ஸ்பெஷல் ரயில்.. புறப்படும் நேரம் மாற்றம்.. பயணிகளே நோட் பண்ணுங்க
சென்னை: சென்னை சென்ட்ரலில் இருந்து சேலம் வழியாக நாகர்கோவில் செல்லும் சம்மர் ஸ்பெஷல் ரயில் புறப்படும் நேரம் இன்று மாற்றப்பட்டுள்ளது. இணை ரயில் வர தாமதம் ஆனதால் 6 மணி நேரம் தாமதமாக புறப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

கோடைக்காலத்தை முன்னிட்டு பலரும் சொந்த ஊர் செல்வது, திரும்பவும் சென்னை வருவது என அடிக்கடி பயணம் மேற்கொண்டு வருகிறார்கள். பள்ளிகள் திறப்பு தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளதால் குடும்பத்துடன் சொந்த ஊர் சென்றவர்களும் கிராமங்களில் இருந்து சென்னை உள்ளிட்ட ஊர்களில் வசிக்கும் உறவினர் வீட்டிற்கு வந்தவர்களும் திரும்பி செல்ல ஆயத்தமாகி வருகிறார்கள்.
இதனால், ரயில், பேருந்துகளில் கடந்த சில நாட்களாகவே பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. கோடை காலத்தில் பயணிகள் சிரமம் இன்றி பயணிக்க ஏதுவாக சிறப்பு ரயில்களை அறிவித்திருந்தது ரயில்வே. அந்த வகையில், சென்னை சென்ட்ரல் - நாகர்கோவில் இடையிலான வாராந்திர சிறப்பு ரயில் (Train No. 06022) அறிவிக்கப்பட்டது.
இந்த ரயில் நாகர்கோவிலில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு ஞாயிற்றுக்கிழமை இயக்கப்படும். அதேபோல், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு திங்கள் கிழமைகளில் இயக்கப்படுகிறது. சென்னை செண்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து பிற்பகல் 3.10 மணிக்கு புறப்படும் இந்த ரயில் அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், போதனூர், பாலக்காடு, திரிசூர், எர்ணாகுளம், செங்கன்னூர், கொல்லம், திருவனந்தபுரம் வழியாக நாகர்கோவிலுக்கு மறுநாள் காலை 8.30 மணிக்கு சென்றடையும்.
இந்த நிலையில், இந்த சிறப்பு ரயில் புறப்படும் நேரம் இன்று மாற்றப்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து பிற்பகல் 3.10 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக 6 மணி நேரம் தாமதாக 19.10 மணிக்கு புறப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இணை ரயில் 4 மணி நேரம் 20 நிமிடங்கள் தாமதாக வருவதால் ரயில் புறப்படும் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் இருந்து நாகர்கோவில் சுற்றுவட்டாரத்தில் உள்ள மக்கள் செல்ல வசதியாக இந்த ரயில் இருந்ததால் பயணிகள் அதிக அளவில் இந்த ரயிலில் பயணம் செய்து வந்தனர். அதேபோல சேலம், ஈரோடு, திருப்பூர் செல்லும் பயணிகளுக்கு இந்த ரயில் வசதியாக இருந்தது. இன்றைய தினம் ரயில் புறப்படும் நேரம் மாற்றப்பட்டுள்ளதால், பயணிகள் கவனத்தில் கொண்டு சிரமம் இன்றி பயணிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.












Click it and Unblock the Notifications