நியூஸ்18 தமிழ் கொடுத்த புகார்.. பெயர் குறிப்பிடாமல் முதல் தகவல் அறிக்கை பதிவு.. மாரிதாஸ் பெயர் இல்லை
சென்னை: சமூக ஊடகங்களில் பேசி வரும் மாரிதாஸ் மீது நியூஸ் 18 தமிழ் டிவி சேனலின் எடிட்டர் வினய் சரவாகி சென்னை நகர குற்றவியல் போலீசில் புகார் அளித்து இருந்தார். அதில் தற்போது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் மாரிதாஸின் பெயர் அதில் குறிப்பிடப்படவில்லை.
Recommended Video
சென்னை நகர குற்றவியல் போலீசில் அளித்து இருக்கும் புகாரில், தன் மீதும், தனது செய்தி சேனல் மீதும் இட்டுக்கட்டிய செய்திகளை மாரிதாஸ் என்பவர் இ மெயில் மூலம் பரப்பி வருகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கொடுத்துள்ளார். ஆனால், முதல் தகவல் அறிக்கையில் மாரிதாஸ் பெயர் இடம் பெறவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. பெயர் பதியாமல் ''அடையாளம் தெரியாத போலி இ மெயில் கிரியேட்டர்'' என்று மட்டும் குறிப்பிடப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது.

கடந்த சில மாதங்களாக தமிழகத்தில் இருக்கும் செய்தி ஊடகங்கள் மீது மாரிதாஸ் குற்றச்சாட்டு வைத்து வருகிறார். இதனால் சிலர் வேலை வாய்ப்பையும் இழந்துள்ளனர். இவரது பேச்சுக்கு ஏன் ஊடக நிர்வாகங்கள் செவி சாய்க்கின்றன என்று தமிழக அரசியல் வல்லுனர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
இவர் சமீபத்தில் நியூஸ் 18 சேனல், புதிய தலைமுறை சேனல் மீது பகிரங்க குற்றச்சாட்டுக்களை வைத்து இருந்தார். இவரது மெயில்கள் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இவருக்கு எதிராக சேவ் மீடியா, சேவ் ஜர்னலிசம் என்ற ஹேஸ்டேக்குகள் டிரண்ட் ஆனது.

தன்னுடைய மெயிலுக்கு சம்பந்தப்பட்ட செய்தி சேனல் நிறுவனத்திடம் இருந்து பதில் கிடைத்துள்ளது என்று ஒரு பொய்யை தூக்கிப் போட்டார். அதற்கும் ஒரு வீடியோவைப் போட்டு மக்களை நம்ப வைத்தார். இவரது இட்டுக் கட்டிய பொய்க்கு சமூக வலைதளங்களில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. சம்பந்தப்பட்ட ஊடகமே முன் வந்து மறுப்பு தெரிவித்து இருந்தது. போலி மின்னஞ்சல் உருவாக்கி அனுப்பப்பட்டுள்ளது என்று அந்த நிறுவனம் உண்மையை வெளியிட்டது. சம்பந்தப்பட்டவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று நியூஸ் 18 தமிழ் எடிட்டர் வினய் சரவாகி தெரிவித்து இருந்தார்.
அதன்படி சென்னை நகர குற்றவியல் போலீசில் புகாரும் அளித்தார். தங்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து இருந்தார். இதனடிப்படையில் மாரிதாஸ் கைது செய்யப்படுவார் என்ற பரவலான பேச்சும் எழுந்தது. ஆனால், முதல் தகவல் அறிக்கையில் ''அடையாளம் தெரியாத போலி இ மெயில் கிரியேட்டர்'' என்று குறிப்பிட்டு வழக்கு பதியப்பட்டுள்ளது. 465, 469, 471, 66(B) r/w 43 of IT சட்டப் பிரிவின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications