காய்ந்து போன ஏரிகள்.. சென்னையில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம்.. கடைசியில் குவாரி தண்ணீர்தான் கதி
சென்னை: சென்னை நகரத்தில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாட தொடங்கியுள்ளது. இன்னும், கோடை காலம் ஆரம்பிக்காத நிலையில், தண்ணீர் தட்டுப்பாட்டை தீர்க்க குவாரிகளில் இருந்து தண்ணீரை எடுக்க ஆரம்பித்துள்ளனர்.
கோடைகாலம் ஆரம்பிக்க உள்ள நிலையில், இப்போதே வெயில் வாட்டி வதைக்கிறது. இந்த நிலையில், சென்னை மாநகராட்சிக்கு குடிநீர் வழங்கும் நீர்த் தேக்கங்களில் தண்ணீர் அளவு கிடுகிடுவென குறையத் தொடங்கியுள்ளது.
சென்னையின் முக்கியமான நீர் ஆதாரமான, செம்பரம்பாக்கம், ஏரியில் தண்ணீர் இருப்பு எவ்வளவு என அறிந்தால் கண்டிப்பாக ஷாக் ஆக வேண்டியிருக்கும்.
வெறும் 2%.. என்னா ஆட்டம் காட்டுது தேமுதிக.. அப்படி என்னதான் வேணுமாம்.. கிடுகிடுக்கும் தேர்தல் களம்!
செம்பரம்பாக்கம் ஏரி தண்ணீர் அளவு
கடந்த சனிக்கிழமை நிலவரப்படி, செம்பரம்பாக்கம் ஏரியில், 21 மில்லியன் க்யூபிக் அடியாக தண்ணீர் உள்ளது. இது மிகவும் குறைவான அளவாகும். இன்னும் ஒரு வாரத்திற்குத்தான், இந்த தண்ணீர் போதும் என்கிறது தகவல்கள். ஏரியில் குறைந்தபட்ச நீர் இருப்பு வைக்க வேண்டியது அவசியம். எனவே செம்பரம்பாக்கம் தண்ணீர் ஒரு வாரம்தான், தாக்குப்பிடிக்கும் என்கிறார்கள்.
கிருஷ்ணா நீர் வரத்து
பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா நதியிலிருந்து வழங்கப்படும் நீரின் அளவை ஆந்திர அரசு குறைத்துவிட்டது. சனிக்கிழமை நிலவரப்படி, கிருஷ்ணா தண்ணீர் வருகை, வினாடிக்கு, வெறும் 10 கன அடியாக இருந்தது. இதனால், சென்னை மெட்ரோ வாட்டர் நிர்வாகம் இப்போது கையை பிசையும் நிலைக்கு வந்துள்ளது.
குவாரியிலிருந்து தண்ணீர்
இந்த நிலையில்தான், கைவிடப்பட்ட குவாரிகளில் தேங்கியுள்ள தண்ணீரை எடுத்து வந்து சென்னை மக்களுக்கு சப்ளை செய்ய ஆரம்பித்துள்ளது, சென்னை மெட்ரோவாட்டர். இதுதான் மரபு சாராத நீர் சப்ளையில் முதல் மாற்றமாக பார்க்கப்படுகிறது. மாங்காடு அருகேயுள்ள சிக்கராயனபுரம் பகுதியிலுள்ள குவாரியிலிருந்து தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது.
சுத்திகரிப்பு பணி
குவாரிகளில் இருந்து தினமும், 30 மில்லியன் லிட்டர் தண்ணீரை எடுத்து 4.5 கிலோ மீட்டர் தொலைவுக்கு பைப் மூலமாக செம்பரம்பாக்கத்திலுள்ள தண்ணீர் சுத்திகரிப்பு மையத்திற்கு கொண்டுவரப்பட்டு, அங்கிருந்து நகரத்திற்கு எடுத்துச் செல்லப்படுகிறது. இதற்காக ரூ.18 கோடி செலவாகிறதாம். குவாரிகளில் இருந்து எடுக்கப்படும் தண்ணீரால் நேரடியாக 3 லட்சம் மக்களுக்கு பலன் கிடைக்கும்.
பெங்களூர் தண்ணீர் பற்றாக்குறை
சென்னையில் இப்படி என்றால், பெங்களூரில் ஓரளவுக்கு தண்ணீர் சேமிக்கப்பட்டு இருந்த பேகூர் ஏரியிலிருந்து, மாநகராட்சி அதிகாரிகள் சுத்தமாக தண்ணீரை வெளியேற்றியுள்ளனர். ஏரியை சுற்றிலும், விளையாட்டு பூங்கா அமைப்பது, படிக்கட்டுகள் அமைப்பது என சுற்றுலாவுக்கு வசதியானதாக இதை மாற்றத்தான் இந்த நடவடிக்கையாம். இதனால், சுற்றுவட்டார பகுதிகளில் போர்வெல்களில் தண்ணீர் கிடைக்காமல் குடிக்க நீர் கிடைக்காமல் மக்கள் அவதிப்படுகிறார்கள்.