போலீசுக்கு பயந்து மாமியார் வீட்டில் பதுங்கிய ரவுடி.. துரத்திச் சென்று தூக்கிய சென்னை போலீஸ்!
சென்னை: சென்னையில் ரவுடிகளின் ராஜ்ஜியத்தை ஒடுக்கும் நடவடிக்கையில் துரிதமாக இறங்கியுள்ள போலீசார், பிரபல ரவுடியான ராதாகிருஷ்ணனை கைது செய்து சிறையிலடைத்தனர்.
சென்னை அரும்பாக்கம் ராணி அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் ராதா கிருஷ்ணன். மதுரையை பூர்வீகமாக கொண்ட அவர், புழல் சிறையில் உள்ள ரவுடி நாகேந்திரனின் கூட்டாளி ஆவார்.
விசிக பிரமுகர் கென்னட், பிரபல ரவுடி தீசட்டி முருகன் உள்ளிட்டோரை கொலை செய்த வழக்கு உள்பட 9 கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளன.
கட்டபஞ்சாயத்து, அடிதடி, ஆள் கடத்தல், ரியல் எஸ்டேட் ஆகிய தொழிலை அவர் செய்து வருகிறார். ரவுடி உலகில் பினு நம்பர் 1-ஆக இருந்தபோது உடல்நிலை பாதிப்பை காரணம் காட்டி கொஞ்ச காலம் அமைதியாக இருந்தார்.
பின்னர் மீண்டும் களத்தில் இறங்க, அவரை கொலை செய்வதற்கு திட்டம் தீட்டவே பூந்தமல்லியை அடுத்த மலையம்பாக்கத்தில் பினுவும், அவரது கூட்டாளிகளும் திரண்டனர். இதுகுறித்து ரகசிய தகவல் அறிந்த போலீஸார் ரவுடிகளை சுற்றி வளைத்து கைது செய்தனர்.
அந்த சமயத்தில் போலீசார் தன்னை என்கவுண்டர் செய்து விடுவார்களோ என்ற பயத்தில் சேலம் நீதிமன்றத்தில் சரணடைந்து சிறை சென்ற அவர் 4 மாதங்களுக்கு முன்பு சிறையிலிருந்து வெளியே வந்தார்.
கடந்த மாதம் சென்னை ஐஸ்ஹவுஸில் நடந்த கொலை வழக்கில் தொடர்புடைய இவரை போலீசார் தேடி வந்தனர்.இந்நிலையில் மதுரவாயல் பகுதியை சேர்ந்த அதிமுக பிரமுகர் ஒருவரையும், தொழில்அதிபர் ஒருவரையும் பணம் கேட்டு மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் மாவூர் கிராமத்தில் தனது மாமியார் வீட்டில் அவர் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து ராதாகிருஷ்ணனை பிடிக்க அண்ணாநகர் காவல் மாவட்ட காவல் துறையினர் அடங்கிய தனிப்படையினர் கடலூர் விரைந்தனர். அங்கு அவரை சுற்றி வளைக்க முயலும் பொழுது அங்கிருந்து தப்பியோடினார்.
தொடர்ந்து அவரை கண்காணித்த போலீசார் மதுரவாயல் மேம்பாலம் அருகே பிடிக்கமுயன்ற பொழுது தவறி விழுந்துள்ளார். அப்போது ராதாகிருஷ்ணனின் வலது கை மற்றும் வலது காலில் முறிவு ஏற்பட்டுள்ளது. அவரை மீட்டு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அதன் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
கடந்த வாரம் முதல் சென்னையில் பல குற்றவழக்குகளில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகளை காவல்துறையினர் கைது செய்து வருவது குறிப்பிடத்தக்கது.