அய்யோ.. இப்படியுமா சாவு வரும்.. சென்னை அருகே என்ஜினீயரிங் கல்லூரி மாணவருக்கு நடந்த சோகம்
சென்னை: காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த தண்டலம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த தனியார் என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் மின்னல் தாக்கி உயிரிழந்தார்.
ஆந்திராவைச் சேர்ந்த 21 வயதாகும் வினய் குமார் என்ற மாணவர் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த தண்டலம் பகுதியில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 4-ம் ஆண்டு படித்து வந்திருக்கிறார்.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் செங்கல்பட்டு மாவட்டங்களில் நேற்று முன்தினம் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. மழையை பொருட்படுத்தாமல் மாணவர் வினய்குமார் தனது இருசக்கர வாகனத்தில், தன்னுடன் படிக்கும் ரேவனு, திவ்யதேஜாவு ஆகியோருடன் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த பாப்பான் சத்திரத்தில் தாங்கள் தங்கி இருக்கும் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது இடி மின்னல் அதிக அளவு இருந்துள்ளது.
தண்டலம் அடுத்த கல்லூரி அருகிலேயே பெங்களூரு- சென்னை தேசிய சாலையில் சென்ற போது திடீரென வினய்குமார் மீது மின்னல் தாக்கி இருக்கிறது. இதில் தலையில் பலத்த காயம் அடைந்த வினய் குமார் இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
அவரது நண்பர்கள் இருவரும் காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள். இந்த விபத்து குறித்து ஸ்ரீபெரும்புதூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சென்னையில் வடகிழக்கு பருவ மழை இன்னும் ஒரு வாரத்தில் ஆரம்பிக்க அதிக வாய்ப்பு உள்ளது. மழை காலங்களில் சாலைகளில் பள்ளம் அதிக அளவு ஏற்படுவது இயல்பு. வழக்கமான சாலைகளை தாண்டி புதிய சாலைகளில் அதிக மழை பெய்யும் காலங்களில் பயணிக்க வேண்டாம். இதேபோல் இடி மின்னலுடன் மழை பெய்யும் போது சாலைகளில் ஓரமாக வாகனத்தை நிறுத்திவிட்டு மழை நின்ற பின் செல்வதே நல்லது.
மழை காலங்களில் பொதுவாகவே அவசியம் இன்றி வெளியில் செல்வது நல்லதல்ல. ஏனெனில் சாலைகளில் பள்ளம் ஒரு புறம் எனில், சில பகுதிகளில் மின் கம்பங்களில் வயர்கள் அறுந்து விழுந்து விடும் வாய்ப்பு உள்ளது. எனவே சாலைகளில் அதிகப்படியான மழை பெய்யும் சமயங்களில் வெளியில் செல்வதை தவிர்ப்பது நல்லது. எளிதாக மழைநீர் தேங்கும் பகுதி என்றால் கூடுதல் விழிப்புணர்வுடன் இருப்பது நல்லது.












Click it and Unblock the Notifications