ஐயா என் புள்ளைய கொடுங்க.. ஆணையர் சங்கர் ஜிவால் காலில் விழுந்து ஆதம்பாக்கம் சத்யாவின் தாய் கண்ணீர்
சென்னை: சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் ஓடும் ரயில் முன் தள்ளிவிடப்பட்டு கொல்லப்பட்ட நிலையில் அவரது வீட்டுக்கு வந்த சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.
சென்னை ஆதம்பாக்கம் காவலர் குடியிருப்பை சேர்ந்தவர் மாணிக்கம். இவரது மனைவி வரலட்சுமி. ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றி வருகிறார். இவரது மகள் சத்யா நேற்று மதியம் அதே பகுதியைச் சேர்ந்த சதீஷ் என்ற இளைஞரால் ஓடும் ரயில் முன்பு தள்ளிவிடப்பட்டு கொல்லப்பட்டார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே போலீஸார் மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் வைத்துள்ளனர்.

அதிர்ச்சி
இந்த நிலையில் சத்யா இறந்ததால் அதிர்ச்சி அடைந்த அவரது தந்தை மாணிக்கம் மாரடைப்பால் இறந்துவிட்டதாக சொல்லப்பட்ட நிலையில் அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இவருடைய உடலும் பிரேத பரிசோதனை செய்வதற்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

பிரேத பரிசோதனை
இருவரது உடல்களும் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும். இந்த நிலையில் சத்யாவின் தாயார் வரலட்சுமி ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் சத்யாவின் குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்ல சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் அவர்களது வீட்டிற்கு சென்றிருந்தார்.

போலீஸ் குடும்பம்
அப்போது சத்யாவின் தாய், எங்கள் குடும்பம் போலீஸ் குடும்பம் என சொல்லுவார்களே தற்போது என் குடும்பத்திலேயே இப்படி நடந்துவிட்டதே. என் மகள் என்ன தவறு செய்தார். எங்களை பார்க்க வீடு தேடி வந்துள்ளீர்கள், ஆனால் என் மகள் இல்லையே.

என் புள்ளைய கொடுங்க
என் புள்ளை என்ன தவறு செய்தது. எப்படியாவது என் மகளை கொடுங்க ஐயா. அந்த பையனை ஏதாவது செய்ய வேண்டும் என கூறி சங்கர் ஜிவாலின் கால்களை பிடித்து அழுதார் வரலட்சுமி. காவல் துறை ஆணையர் சங்கர் ஜிவாலும் வரலட்சுமியின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். வரலட்சுமி புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications