சென்னைவாசிகளே இனி டிராபிக் பிரச்சினை இருக்காது.. அண்ணா சாலை உட்பட 7 முக்கிய சாலைகள் விரிவாக்கம்
சென்னை: தலைநகர் சென்னையில் டிராபிக் மிகப் பெரிய சிக்கலாக உருவெடுத்து வரும் நிலையில், அதைத் தடுக்க சென்னை மாநகராட்சி சாலைகளை விரிவாக்கம் செய்வதில் முக்கிய நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது.
இந்தியச் சாலைகள் ஒவ்வொரு ஆண்டும் நெரிசல் மிகுந்தவையாக மாறிக் கொண்டே இருக்கிறது. பொருளாதார வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் சாலைகளில் ஓடும் வாகனங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்திய நகரங்களில் சென்னை போக்குவரத்து நெரிசல் மிகுந்த ஒன்றாகவே உள்ளது. பீக் ஹவர்களில் வெளியே சென்றால், எப்படியும் குறிப்பிட்ட நேரத்தைச் சாலையில் டிராபிக்கிலேயே செலவிட வேண்டிய சூழலே நிலவுகிறது.

நெரிசல்
சென்னையில் மின்சார ரயில்கள், மெட்ரோ இருந்தாலும் கூட டிராபிக் குறையவில்லை. இதற்கு முக்கிய காரணம் அவை குறிப்பிட்ட பாதைகளில் மட்டுமே இயங்குகிறது. இதனால் சாலைகளில் கூட்டம் எப்போதுமே அதிகரித்தே வருகிறது. அதிகரிக்கும் போக்குவரத்திற்கு ஏற்ப சாலைகளை மாற்றும் நடவடிக்கையிலும் சென்னை மாநகராட்சி இறங்கியுள்ளது. அடுத்து வரும் காலங்களில் போக்குவரத்து எப்படி இருக்கும் என்பதைக் கணக்கில் வைத்து இங்குள்ள மேம்பாலங்கள் மற்றும் சாலைகளை விரிவாக்கம் செய்யும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது.

சாலை விரிவாக்கம்
சென்னை நகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் சாலைகள் அகலப்படுத்த முடிவெடுக்கப்பட்டன. அதில் 422 சாலைகளின் திருத்தப்பட்ட உத்தேச அகல விபரங்கள் சமீபத்தில் வெளியிடப்பட்டன. இதனிடையே நகரில் முக்கியமான 7 சாலைகள் விரிவாக்கம் செய்ய முதற்கட்ட பணிகளை மத்திய அரசு ஆரம்பித்துள்ளது. அடுத்த 20 ஆண்டுகளுக்கு டிராபிக் வளர்ச்சியைக் கணக்கில் கொண்டு இந்த சாலை விரிவாக்க பணிகளைச் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் எடுத்துள்ளனர். முதற்கட்டமாக அண்ணா சாலை உட்பட 7 சாலைகளில் விரிவாக்கத்தை மேற்கொள்ளச் சாத்தியமான மேம்பாடுகளை அடையாளம் காணும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

எந்த சாலைகள்
அண்ணா சாலை முதல் மத்திய கைலாஷ் வரையிலான 3 கிமீ சர்தார் படேல் சாலை, பாந்தியன் சாலை-கூவம் இடையேயான எத்திராஜ் சாலை (0.72 கிமீ ), கீழ்ப்பாக்கம் டெய்லர்ஸ் சாலை முதல் அண்ணாநகர் முதலாவது பிரதான சாலை வரையிலான கீழ்ப்பாக்கம் கார்டன் சாலை (1.4 கிமீ) ஆகியவற்றில் ஆய்வு தொடங்கப்பட்டுள்ளது. மேலும், நெல்சன் மாணிக்கம் சாலை- வள்ளுவர் கோட்டம் சாலை டேங்க் பண்ட் சாலை (1.1 கிமீ), அண்ணா சாலை-பாந்தியன் சாலை கிரீம்ஸ் சாலையிலும் (1.3 கிமீ ) ஆய்வுகள் தொடங்கப்பட்டுள்ளன. மேலும், நியூ ஆவடி சாலை, பெரம்பூர் பேரக்ஸ் ஆகியவற்றிலும் ஆய்வுகள் தொடங்கப்பட்டுள்ளன..

விரிவாக்கம்
அண்ணா பல்கலைக்கழகம், ஐஐடி என முக்கிய கல்வி நிறுவனங்கள் அமைந்துள்ள சர்தார் படேல் இப்போது 20 மீட்டர் அகலத்தில் உள்ளது. இங்கு பீக் ஹாரில் டிராபிக் உச்சத்தில் இருக்கும். இங்கு 30.5 மீட்டர் அகலத்தில் சாலையை விரிவாக்கம் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. இது தவிர எத்திராஜ் சாலை, நியூ ஆவடி சாலை, டேங்க் பண்ட் சாலை, கிரீம்ஸ் சாலை, கீழ்ப்பாக்கம் கார்டன் சாலை 18 மீட்டர் வரை விரிவாக்கம் செய்யப்படுகிறது. அதேபோல பெரம்பூர் பேரக்ஸ் சாலை 24 மீட்டருக்கு அகலப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

வல்லுநர் குழு
ஆனால், இந்த சாலை விரிவாக்க பணிகளை உடனடியாக தொடங்க முடியாது. இப்போது அமைக்கப்பட்டுள்ள இந்த குழு, சாலை விரிவாக்கத்துக்குத் தேவையான இடங்கள் கண்டறிவது, கட்டிடங்களைக் கையகப்படுத்துவது, அந்த கட்டிடங்களுக்கு எவ்வளவு இழப்பீடு வழங்க வேண்டும், விரிவாக்கத்திற்கு எத்தனை மரங்களை அகற்று வேண்டும் என்பது குறித்து விரிவான ஆய்வை செய்யும். இந்த ஆய்வறிக்கையை அவர்கள் ஒரு மாதத்தில் சமர்ப்பிப்பார்கள். அதன் அடிப்படையில் முடிவு எடுக்கப்பட்டு சாலை விரிவாக்க பணிகள் தொடங்கப்படும் என்றே கூறப்படுகிறது.

இணைக்கும் திட்டம்
அதேபோல சென்னையில் உள்ள மெட்ரோ நிலையங்களுடன் அங்குள்ள பிரதான சாலைகளை இணைக்கவும் திட்டமிட்டுள்ளனர். இது மட்டுமின்றி சென்னை வெளிவட்டச் சாலைகளுடன் அருகே இறுக்கும் கிராமச் சாலைகளை இணைக்கும் திட்டத்தையும் போட்டுள்ளனர். முதல்கட்டமாக சீமாபுரம், திருமுடிவாக்கம் ஆகிய பகுதிகளில் இருக்கும் கிராமங்களை வெளிவட்டச் சாலையுடன் இணைக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications