சென்னை மாநகராட்சி ஆணையர் விதித்த கெடு.. 22 நாள் தான்.. மடிப்பாக்கம், முகலிவாக்கத்திற்கு ஹேப்பி
சென்னை: சென்னையில் மடிப்பாக்கம், முகலிவாக்கம் உள்பட பல்வேறு பகுதிகளில் அக்டோபர் 5ம் தேதிக்குள் சாலை சீரமைப்பு பணிகளை முடிக்க வேண்டும் என சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ், அதிகாரிகளுக்கு கெடு விதித்துள்ளார்.
சென்னையில் வடகிழக்கு பருவ மழைக்கு முன் மழைநீர் வடிகால் பணிகள், பாதாள சாக்கடை பணிகள் மற்றும் சாலை பணிகள் உள்பட பல்வேறு பணிகளை முடிக்க வேண்டிய கட்டாயம் மாநகராட்சிக்கு ஏற்பட்டுள்ளது.

சென்னையில் மடிப்பாக்கம், முகலிவாக்கம் போன்ற பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகள், குடிநீர் குழாய் பதிக்கும் பணிகள் ஆகியவை கடந்த சில ஆண்டுகளாக நடந்து வந்தன. இதனால் சாலைகள் பல இடங்களில் தோண்டப்பட்டுள்ளன. இந்த சாலைகளை பருவமழைக்கு முன்பு போட வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்து மாநகராட்சி பணியாற்றி வருகிறது.
இந்நிலையில், சென்னையில் முகலிவாக்கம், மதானந்தபுரம், ராமாபுரம், மடிப்பாக்கம் ஆகிய பகுதிகளில் சாலை சீரமைப்புப் பணிகளை அக்டோபர் 5-ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் டாக்டர் ஜெ ராதாகிருஷ்ணன் அதிகாரிகளுக்கு கெடு விதித்திருக்கிறார்.
இது தொடர்பாக ராதாகிருஷணன் ஐஏஎஸ் கூறுகையில், "மதனந்தபுரம் - முகலிவாக்கம் சாலையில், சீரமைக்கப்பட உள்ள 2,600 மீட்டர் தூரத்தில், 1,150 மீட்டர் பகுதி நெடுஞ்சாலைகளால் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. இதில் மாநகராட்சி 1,050 மீட்டருக்கு வெட் மிக்ஸ் மெக்காடம் போட்டு முடித்துள்ளது. 100 மீட்டர் தூரம் இன்னும் வெட் மிக்ஸ் மெக்காடம் போட்டு சீரமைக்கப்படவில்லை . இந்நிலையில் 1,150 மீட்டர் சாலையும் அக்டோபர் 5ஆம் தேதிக்குள் போடப்படும்.
முகலிவாக்கம் வார்டு 156ல், 105 ரோடுகள் ஒப்படைக்கப்பட்டு, 16 ரோடுகள் புதுப்பிக்கும் பணி நடந்து வருகிறது. வடகிழக்கு பருவமழைக்கு முன் மேலும் 68 சாலைகள் சீரமைக்கப்படும்.
மணப்பாக்கம் வார்டு 157ல், மாநகராட்சி சார்பில் 55 ரோடுகளில், 28 ரோடுகள் சீரமைக்கும் பணி முடிவடைந்து, 28 ரோடுகள் சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. மீதமுள்ள சாலைகள் வடகிழக்கு பருவமழைக்கு முன் மறுசீரமைக்கப்படும்" என்று கூறினார்.












Click it and Unblock the Notifications