ஆகஸ்ட் 22-ம் தேதி மெட்ராஸ் தினம்.. போட்டிகளில் பங்கேற்க பொதுமக்களுக்கு சென்னை மாநகராட்சி அழைப்பு!
சென்னை: ஆகஸ்ட் 22-ம் தேதி மெட்ராஸ் தினம் கொண்டாடப்படுவதையொட்டி பல்வேறு போட்டிகளில் பொதுமக்கள் கலந்துகொள்ள சென்னை மாநகராட்சி அழைப்பு விடுத்துள்ளது.
இது தொடர்பாக பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
சென்னை மாநகரின் வரலாற்றினை சிறப்பிக்கும் வகையில் பெருநகர சென்னைமாநகராட்சியின் சார்பில் நடைபெற உள்ள மெட்ராஸ்தின நிகழ்ச்சிகளில் பொதுமக்கள் கலந்து கொள்ள வரவேற்கப்படுகிறார்கள்.
ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் 22ம் தேதி மெட்ராஸ் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. மதராசப் பட்டினம் 1639ம் ஆண்டு முதல் தற்பொழுது வரை பல்வேறு நிலைகளில் வளர்ச்சி அடைந்து சென்னை மாநகரமாக 382வது ஆண்டை நிறைவு செய்துள்ளது.

மெட்ராஸ் தினம்
மேலும் இந்தச் சிறப்பு மிக்க மெட்ராஸ் தினத்தினை கொண்டாடும் வகையில், பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் தூய்மைப் பணி உட்பட பல்வேறு நிகழ்ச்சிகளும், பொதுமக்கள், கல்லூரி, பள்ளி மாணவ, மாணவியர்கள் மற்றும் கலைஞர்கள் பங்குபெறும் வகையில் போட்டிகளும் நடத்தப்பட உள்ளன. மெட்ராஸ் தினத்தினை கொண்டாடும் வகையில் பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் குடிசைப் பகுதிகளில் மரக்கன்றுகள் நடுதல் மற்றும் அழகுப்படுத்தும் பணிகள் 22-08-2021 அன்று அமைச்சர் பெருமக்களால் தொடங்கிவைக்கப்படவுள்ளது.

நடமாடும் முகாம்
அதன்படி, தமிழ்நாடு குடிசை மாற்று வாரியக் குடியிருப்பு பகுதிகளில் மரக்கன்றுகள் நடுதல், கோவிட் தடுப்பூசி சிறப்பு முகாம்கள் அமைத்தல்,தீவிரத் தூய்மைப் பணி மேற்கொள்ளுதல் மற்றும் சுவர்களில் வண்ண ஓவியங்கள் வரைந்து அழகுப்படுத்துதல் போன்ற பணிகளும், பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் 80 வயதிற்கு மேற்பட்ட நபர்களுக்கு அவர்களின் இருப்பிடங்களுக்கே சென்று கோவிட் தடுப்பூசி செலுத்த சிறப்பு நடமாடும் முகாமினை தொடங்கி வைத்தல்,

கோலங்கள் போடுதல்
மாநகராட்சி அலுவலகங்கள் மற்றும் காப்பகங்களில் அழகுப்படுத்தும் வகையில் கோலங்கள் போடுதல், பேருந்து தட சாலைகள் மற்றும் உட்புறச் சாலைகளில் அழகுப்படுத்துதல் மற்றும் மரக்கன்றுகள் நடுதல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. மேலும், குடிசைப் பகுதிகளில் சுவர்களில் வரையப்பட்ட வண்ண ஓவியங்களை செல்ஃபி புகைப்படம் எடுத்து 94451 90856 என்ற வாட்ஸ் ஆஃப் எண்ணிற்கு அனுப்பி வைக்கலாம்.

ட்விட்டர் தளம்
இதில் சிறந்த சுவர் ஓவியங்கள் மாநகராட்சியின் ட்விட்டர் தளத்தில் பகிரப்படும். மாநகராட்சி பூங்காக்கள் மற்றும் நீர்நிலைகளில் உள்ள பறவைகளை புகைப்படம் எடுத்து twitter@chennaicorp-ல் பகிரலாம். ஆர்வமுள்ள பொதுமக்கள், தன்னார்வலர்கள் மற்றும் தனியார் தொண்டு நிறுவனங்கள் மெட்ராஸ் தின நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவும், மேலும், இந்த நிகழ்ச்சிகளை சிறப்பாக கொண்டாட CSR நிதியினை வழங்கவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

பொதுமக்கள் கலந்து கொள்ளலாம்
இந்நிகழ்ச்சிகளில் பங்குகொள்ள பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்கள் தங்களுடைய விவரங்களை https://forms.gle/8KYXEhgiuTKnopfR7 என்ற இணைப்பில் சென்று பதிவேற்றம் செய்யலாம். மேலும், மாநகராட்சியின் சார்பில் கீழ்க்கண்ட அட்டவணையில் உள்ளவாறு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட உள்ளன( இந்த போட்டிகள் தொடர்பான அட்டவணை இந்த செய்தியுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த போட்டிகளில் கலந்து கொள்ள விருப்பமுள்ள நபர்கள் தங்களுடைய படைப்புகளை https://chennaicorporation.gov.in/gcc/online-services/comp/home.jsp என்ற இணையதள இணைப்பில் அட்டவணையில் குறிப்பிட்டுள்ள போட்டிகளுக்கான நாட்களில் பதிவேற்றம் செய்யலாம்.

சென்னையின் அடையாளம்
மேலும், சென்னை மாநகரின் அடையாளத்தை குறிக்கும் சிற்பங்களை தயார் செய்து 22.08.2021 முதல் 28.08.2021 வரை நேரடியாக மாநகராட்சி தலைமையிடத்தில் உள்ள சென்னை சீர்மிகு நகரத் திட்ட அலுவலகத்தில் வழங்கலாம். மேலும், இதுகுறித்த தகவல்களை 94451 90856 என்ற வாட்ஸ் ஆப் எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.

பங்களிப்பு அளிக்க வேண்டும்
பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் நடைபெற உள்ள மெட்ராஸ் தின விழா நிகழ்ச்சிகளில் பொதுமக்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு சென்னை மாநகருக்கு பெருமை சேர்க்கும் வகையில் தங்கள் பங்களிப்பை அளிக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு, பெருநகர சென்னை மாநகராட்சி செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications